ஐபோன்.. சிறை அறைக்கு கர்டைன்கள்.. அதிகாரிகளுக்கு மாதம் ரூ 65 லட்சம் செலவு.. சுகேஷின் வாக்குமூலம்
டெல்லி: திகார் சிறையில் சொகுசாக இருக்க சுகேஷ் சந்திரசேகர் மாதந்தோறும் சிறை அதிகாரிகளுர்ரு ரூ 65 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து சிறைத் துறை கண்காணிப்பாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்புடன் இருப்பதாக பல அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பிளவுப்பட்டிருந்த போது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.

திகார் சிறை
இந்த வழக்கில் இவருடன் கைதானவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் இவர் மட்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறார். முன்னணி மருந்து நிறுவனத்தின் உரிமையாளரின் மனைவியிடம் இருந்து 200 கோடி ரூபாய் சுகேஷ் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரோஹினி சிறை
இது தொடர்பாக டெல்லி பொருளாதார குற்றவியல் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து அண்மையில் மகாராஷ்டிரா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ரோஹினியில் உள்ள சிறையில் இருந்த சுகேஷிடம் திகார் சிறை துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் ஐபோன் இருந்தது கண்டறியப்பட்டது.

செல்போன்
மேலும் அவருக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதையும் கண்டறிந்தனர். இவர் செல்போன் பயன்படுத்துவதையும் இதர சலுகைகளை அனுபவிப்பதையும் மற்ற கைதிகளோ சிறை துறையினரோ அறியாத வகையில் தனது பெட்ஷீட் மூலம் திரையை போட்டு தனது சிறை அறையையே மூடியுள்ளார் என தெரிகிறது.

ஐபோன்
இதையடுத்து அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில் சிறை அதிகாரிகள் மூலம் ஐபோன் வாங்கியதாகவும் அந்த போனுக்கான செட்டிங்ஸ் சென்னையில் ஒருவர் செய்து கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதற்காக மாதத்தில் இரு முறை ரூ 65 லட்சத்தை தனக்கு சலுகை காட்டும் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதும் தெரியவந்தது.

ரோகிணி சிறை அதிகாரிகள்
சுகேஷ் முன்பு அடைக்கப்பட்டிருந்த திகார் சிறை, தற்போது அடைக்கப்பட்டுள்ள ரோகிணி சிறை அதிகாரிகள் 9 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2 சிறை கண்காணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications