65வது நினைவு தினம்: டெல்லியில் அம்பேத்கர் சிலைக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை
டெல்லி: சட்டமேதை அம்பேத்கரின் 65 ஆவது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினர்.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 65 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எம்பிக்கள் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் சட்ட அமைச்சராக பதவியேற்றார். இவர் உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் ஆவார். பட்டியலின மக்களுக்காக கழகம் ஒன்றை தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிப்புக்காக போராடியவர்.
பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆயிரக்கணக்கான பட்டியலின மக்களை பௌத்த மதத்தை தழுவ செய்தவர். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். தற்போது இந்திய அரசால் பின்பற்றப்படும் அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.
தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே செலவிட்டவர் அம்பேத்கர். வர்ணாசிரம தருமத்திலிருந்து தோன்றிய சாதிய அமைப்பையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்த்து முனைவர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார். இறுதியில் 1956-ல் தமது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தில் இணைந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஏப்ரல் 14 ஆம் தேதி 1891 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கடந்த 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி காலமானார். இவரது மரணத்திற்கு பிறகு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.