இதுதான் எதிர்கால இந்தியா! ஆளை விழுங்கும் குழி.. பார்த்ததும் குழந்தைகள் செய்த காரியம்.. சல்யூட்
டெல்லி: சாலையின் நடுவே இருந்த பெரிய புதை சாக்கடை குழியில் யாரும் விழுந்து விடாமல் இருக்க இரண்டு சின்னஞ்சிறு சிறார்கள் செய்த காரியம்தான் இன்று இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த சாலையில் இந்தக் குழியை பார்த்துவிட்டு கடந்து சென்ற நூற்றுக்கணக்கான பெரியவர்களுக்கு தோன்றாத எண்ணம், இந்த சிறுவர்களுக்கு தோன்றியதுதான் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.
பொதுவாக, இன்றைய தலைமுறை சிறுவர்கள் மீது ஆயிரக்கணக்கான எதிர்மறை விமர்சனங்கள் தொடுக்கப்பட்டு வரும் நிலையில், "நாங்கள் அப்படியெல்லாம் அல்ல.. எங்களுக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது" என சொல்வது போல இந்த சம்பவம் அமைந்திருக்கிறது.
ஒரே மாதிரி எடைபோட வேண்டாம்
கடந்த தலைமுறை குழந்தைகளை ஒப்பிடுகையில், இன்றைய தலைமுறை குழந்தைகளும், சிறுவர்களும் பல மடங்கு புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், பெரும்பாலான சிறுவர்களிடம் தற்போது சில நல்ல பண்புகள் குறைந்துவிட்டதோ என்றே தோன்றுகிறது. பெற்றோர்களுக்கு மதிப்பளிப்பது, பெரியவர்களுக்கு கீழ்படிவது, சமூக பொறுப்புடன் நடந்து கொல்வது போன்ற நல்லொழுக்க பண்புகள் குறைந்திருப்பதை நாம் பரவலாக பார்க்க முடிகிறது. அதே சமயத்தில், பொத்தம்பொதுவாக இன்றைய சிறார்கள் அனைவரையும் அப்படி எண்ணிவிடாதீர்கள் என நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல ஒரு வீடியோதான் சமூக வலைதளங்களில் இன்று வைரலாகியுள்ளது.
சாலையில் இருந்த புதைக்குழி
ட்விட்டரில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், எந்த இடம் எனக் குறிப்பிடப்படவில்லை. எனினும், இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு நகரம் என்பது மட்டும் தெரிகிறது. அந்த வீடியோவில், 7 வயது மதிக்கத்தக்க சின்னஞ்சிறு சிறுவர் - சிறுமிகள் இருவர், புத்தகப்பையை தோளில் மாட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு பெரிய புதைச் சாக்கடை குழி இருப்பதை அவர்கள் பார்க்கின்றனர். ஒரு வளர்ந்த பெரிய மனிதன் கூட அந்தக் குழியில் விழுந்து விடும் அளவுக்கு அந்தக் குழி பெரிதாக உள்ளது.
கற்களை எடுத்து வைத்த சிறார்கள்
சிறிது நேரம் அந்தக் குழியை பார்த்த அவர்கள் அங்கிருந்து செல்கின்றனர். சரி., குழியை பார்த்து பயந்து அவர்கள் ஒதுங்கி சென்றுவிட்டார்கள் என நாம் நினைப்போம். ஆனால், அவர்களோ சாலையோரத்தில் இருந்த பெரிய பெரிய கற்களை தங்கள் சின்னஞ்சிறு கைகளால் தூக்க முடியாமல் தூக்கி வந்து, அந்தக் குழியை சுற்றிலும் ஒவ்வொன்றாக வைக்கின்றனர். குழி இருப்பதை அங்கு வருபவர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இப்படி அந்தக் குழந்தைகள் செய்கிறார்கள்.
கொட்டும் பாராட்டு மழை
பின்னர், தங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு அந்த சிறார்கள் அங்கிருந்து செல்கின்றனர். இந்த சிறார்கள் வருவதற்கு முன்பு இந்த வழியே எத்தனை பெரியவர்கள் சென்றிருப்பார்கள். ஏன் காவல்தறையினர் கூட இந்த இடத்தை கடந்து சென்றிருப்பார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் யார் விழுந்தால் நமக்கென்ன என்ற மனநிலையில் அந்தக் குழியை பார்த்துவிட்டு சென்றிருப்பர். அதே சமயத்தில், வெறும் 7 வயது நிரம்பிய குழந்தைகள், மற்றவர்கள் யாரும் குழியில் விழுந்துவிடக் கூடாதே என்ற சமூக பொறுப்புணர்வுடன் இந்த செயலை செய்துள்ளனர். இந்த சிறார்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.