உதய்பூர் கொலை! குற்றவாளிகளுக்கு சிறையில் பிரியாணி வழங்கப்பட்டதா? தீயாக பரவும் தகவல்! போலீஸ் விளக்கம்
டெல்லி: உதய்பூர் படுகொலையில் தொடர்பான குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
Recommended Video
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்தவர் கன்ஹையா லால். 48 வயதான இவர் நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார்.
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபர் சர்மா, டிவி நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து சில சர்ச்சை கருத்துகளைக் கூறி இருந்தார்.
உதய்பூர் கொலை.. ஹேல்மெட் உடன் பைக்கில் பறந்த கொலையாளிகள்! சுற்றிவளைத்த போலீஸ்! பரபர சிசிடிவி வீடியோ
கொலை
இந்த விவகாரத்தில் பலத்த கண்டனங்கள் எழுந்த நிலையில், நுபர் சர்மா மீது கட்சி ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நுபர் சர்மாவுக்கு ஆதரவாகத் தனது பேஸ்புக் பக்கத்தில் கன்ஹையா லால் கருத்து பதிவிட்டுள்ளார். இந்தச் சூழலில், நேற்று துணி வாங்குவது போல அவரது கடைக்குச் சென்ற இருவர், அவரது தலையைத் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்தனர்.
தடை
இதனால் ராஜஸ்தான் மாநிலம் முழுதும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு இணையச் சேவை துண்டிக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ராஜஸ்தானில் ஒரே இடத்தில் அதிகளவில் மக்கள் சேர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையைப் பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதி, தேசிய பாதுகாப்பு முகமை விசாரணைக்கு மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
பரவிய தகவல்
இதனிடையே நேற்றிரவு கொலையாளிகள் இருவரையும் ராஜஸ்தான் போலீசார் கைது செய்து இருந்தனர். இந்தச் சூழலில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருவருக்கும் சிறையில் பிரியாணி வழங்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல இந்தி ஊடகம் இதைச் செய்தியை முதலில் வெளியிட்டு இருந்தது. "கைது செய்யப்பட்ட பிறகு, உதய்பூர் கொலையாளிகள் இருவருக்கும் ராஜஸ்தான் சிறையில் பிரியாணி வழங்கப்படுகிறது. அது உத்தரப் பிரதேசமாக இருந்தால் என்ன நடந்து இருக்கும்?" என்று செய்தி வெளியிட்டு இருந்தனர்.
விமர்சனம்
இதனைப் பிரபல செய்தி நிறுவனத்தின் தொகுப்பாளர் உட்பட பலரும் பகிர்ந்தனர். கொடூர கொலை செய்த ஒருவருக்குப் பிரியாணி வழங்கப்பட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக ராஜஸ்தான் அரசையும் அவர்கள் கடுமையாகச் சாடி இருந்தனர். இந்நிலையில், இணையத்தில் பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர்.
விளக்கம்
இது தொடர்பாக ராஜஸ்தான் போலீசார் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், "ஒரு போலி செய்தி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இது முற்றிலும் தவறானது. உதய்பூரில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளிடம் போலீசார் மென்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று பதிவிட்டு உள்ளனர். மேலும், அந்த போலி செய்தியையும் அவர்கள் பதிவிட்டு உள்ளனர்.
நிலைமை கட்டுக்குள் உள்ளது.
போலீசார் விளக்கம் அளித்துள்ள பின்னர், பலரும் இந்த தகவலை நீக்கி வருகின்றனர். உதய்பூர் டெய்லர் படுகொலைக்குப் பின்னர், நேற்று ராஜஸ்தானில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இருப்பினும், இப்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.