ரூ.5,116 கோடியில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் உற்பத்தி செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்!
டெல்லி:ரூ5,116 கோடியில் 7.5 லட்சம் ஏ.கே 203 ரக துப்பாக்கிகளை ரஷ்யாவின் ஒத்துழைப்புடன் உற்பத்தி செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ராணுவத்தில் தற்போது 7.62 மி.மீ.ரைபிள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது 1990களில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. அண்மைக்காலமாக இதன் பயன்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதனையடுத்தே இந்த ரைபிள்களுக்குப் பதில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. ஏ.கே.203 என்பதன் முந்தைய பெயர் ஏ.கே 103 என்பதாகும். இந்த ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் 2018-ல் ஆயுத தளவாடங்களை தயாரிக்கும் மிக்கைல் கலாஷ்னிக்கோவ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். இது ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின் நவீன வடிவமாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியாவில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளை ரஷ்யாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்வது தொடர்பாக 2018-ம் ஆண்டு முதல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு முட்டுக்கட்டைகளை தாண்டி தற்போது மத்திய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
ரஷ்யா அதிபர் விளாடிமீர் புதின் இந்தியாவுக்கு அடுத்த மாதம் வருகை தரும் போது இதற்கான அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. முதல் கட்டமாக ஒரு ஏ.கே.203 ரக துப்பாக்கியின் விலை ரூ80,000 என்ற மதிப்பில் சுமார் 20,000 துப்பாக்கிகள் வாங்கப்பட இருக்கிறது.
இதன்பின்னர் 6,01,427 ஏ.கே.203 ரக துப்பாக்கிகள், உ.பி.மாநிலம் அமேதியில் உள்ள இந்தோ-ரஷ்யா ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும். இந்த ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஷ்யா அதிபர் புதின், இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
அண்மையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகமானது ரூ.7,965 கோடி மதிப்பிலான 12 இலகுரக ஹெலிகாப்டர்கள் உட்பட ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களை ஒப்புதல் அளித்தது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் ராணுவ தளவாடங்களானது, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்துவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது. உ.பி.யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் மத்திய அரசின் இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.












Click it and Unblock the Notifications