"நீங்க காரை தொடக்கூட கூடாது.." ரிஷப் பண்ட் விபத்தில் விலகாத மர்மம்.. ஜாம்பவான் கபில் தேவ் பரபர
டெல்லி: விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், இது தொடர்பாக பண்டிற்கு அட்வைஸ் செய்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை அதிகாலை இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் ஓட்டி வந்த சொகுசு கார் மிக மோசமான விபத்தில் சிக்கியது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவொரு மோசமான காயமும் ஏற்படவில்லை.
உடனடியாக அப்பகுதியில் இருந்த சுஷில் என்ற பஸ் டிரைவர் ரிஷப் பண்டை காப்பாற்றினார். காரின் உள்ளே சிக்கியிருந்த ரிஷப் பண்ட்டை சுஷில் குமார் தனது நடத்துநர் மற்றும் சக பயணிகள் உதவியுடன் காப்பாற்றியுள்ளார்.
பொங்கல் பரிசு தொகுப்பு..நாளை முதல் வீடு தேடி வரும் டோக்கன்..ஜன.9ல் தொடக்கி வைக்கும் முதல்வர்
கார் விபத்து
உத்தரகண்ட் டெல்லி நெடுஞ்சாலையில், ரிஷப் பண்ட் அதிகாலை நேரத்தில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார். திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சறுக்கிக் கொண்டே எதிரே இருந்த டிவைடரில் மோதியதில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அப்போது இப்பகுதியில் தனது பேருந்தை ஓட்டி வந்த சுஷில் குமார் கண்ணாடி வழியே அவரை வெளியே இழுத்துள்ளனர். அப்போது பண்ட் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் அழர் தெரிவித்தார். உடனடியாக பண்ட் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரிஷப் பண்ட்
நல்வாய்ப்பாக அவருக்குத் தீவிர பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம் அவருக்குத் தலை மற்றும் முதுகு பகுதியில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவருக்குச் சிறு ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டுள்ளன. ரிஷப் பண்ட் அதிவேகத்தில் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விபத்து நடந்து சில நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இன்னும் விபத்திற்கான காரணம் தெரியவில்லை. அவர் மது அருந்திவிட்ட வாகனம் ஓட்டியதாக வெளியான தகவலை போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். கார் ஓட்டும் போது அவர் தூங்கியிருக்கலாம் அல்லது சாலையில் இருந்து பெரிய பள்ளத்தை அவர் கவனிக்காமல் விட்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர்.
எனக்கும் நடந்துள்ளது
ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ், கிரிக்கெட் வீரர்கள் யாரும் தனியாக வாகனம் ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இந்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இதை ஒரு படிப்பினையாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில், நான் இளைஞராக இருந்த போது எனக்கும் மோட்டார் விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு எனது சகோதரர் என்னை பைக்கை தொடக்கூட விடவில்லை..
டிரைவர்
ரிஷப் பண்ட் நன்றாக உள்ளார் என்பதைக் கேட்டதும் சந்தோஷமாக உள்ளது. என்ன தான் வேகமாகச் செல்லும் கார் இருந்தாலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் ஒரு டிரைவரை எளிதாக வைத்துக் கொள்ளலாம். நீங்கள் தனியாக கார் ஓட்ட வேண்டியதில்லை. சிலருக்கு இதுபோல (கார் ஓட்டுவது) பொழுதுபோக்கில் ஆர்வம் இருக்கலாம். அந்த வயதில் அது இயல்பாக வருவதுதான். ஆனால் உங்களுக்குப் பொறுப்புகள் உள்ளன. உங்களை நீங்கள் மட்டுமே கவனித்துக் கொள்ள முடியும். எனவே கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
யாரும் வண்டி ஓட்டக் கூடாது
மேலும், இந்தியாவில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே நல்ல டிரைவரை வைத்துக் கொள்ளலாம் என்றும் அதற்கான வசதி அவர்களிடம் உள்ளது என்றும் தெரிவித்தார். இதை நாம் ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், பண்ட் மட்டுமின்றி அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தனியாக ஒரு டிரைவர் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
விலகாத மர்மம்
ரிஷப் பண்ட் விபத்து எப்படி ஏற்பட்டது என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. போலீசார் இது குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ, பண்டிற்கு ஏற்பட்ட காயங்கள் குறித்த தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பண்டின் நெற்றியில் இரண்டு வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரது வலது முழங்காலில் தசைநார் கிழிந்துள்ளது. மேலும் உடலில் பல சிறிய காயங்களும் தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளன. 25 வயதான பண்டின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் ஏற்கனவே அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து நார்மல் வார்டிற்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.