சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை.. குஜராத்தில் மாஃபியாக்களை பாதுகாப்பது யார்.. ராகுல் சரமாரி கேள்வி!
டெல்லி: குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாஜக அரசுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மதுபானம் உற்பத்தி, விற்பனை மற்றும் நுகர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி மது விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை அருந்திய பலரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 42 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 97 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதில் மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாநில அரசு தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ரூ.1.5 கோடி மதிப்பிலான கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் ஜக்தீஷ் தாகூர் கூறுகையில், கள்ளச்சாராயம் குடித்த பொதுமக்கள் உயிரிழந்த சம்பவம் மாநிலத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. கள்ளச்சாராய விற்பனை குறித்து காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆளும் பாஜக அரசும், காவல்துறையினரும் இணைந்து கள்ளச்சாராயம் விற்பனையாளர்களுடன் செயல்படுகின்றனர். மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்காமல், சாராயமும், போதைப்பொருளையும் வழங்குவதாக குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் காங்கிரஸ் லோக் சபா உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், குஜராத் மாநிலத்தில் பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. காந்தியும், சர்தார் வல்லபாய் படேலும் பிறந்த நிலத்தில் கண்மூடித்தனமாக போதைப்பொருள் வியாபாரம் செய்யும் இவர்கள் யார். இந்த ஓதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications