ராணுவத்தில் 40 ஆண்டு! தீவிரவாதிகளுக்கு சிம்மசொப்பனம்! யார் இந்த முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்?
டெல்லி: இந்திய ராணுவத்தின் முப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ராணுவத்தில் 40 ஆண்டு பணி அனுபவம் கொண்டுள்ள நிலையில் காஷ்மீரில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவம், விமானப்படை, கப்பற்படைக்கு தனித்தனியே தளபதிகள் உள்ளனர். இந்த முப்படைகளை ஒருங்கிணைக்கும் வகையில் முப்படைகளின் தலைமை தளபதி பதவி உருவாக்கப்பட்டது.
இந்த பொறுப்பில் கடந்த 2019 டிசம்பர் முதல் ஜெனரல் பிபின் ராவத் செயல்பட்டு வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8ல் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மரணமடைந்தார்.

அனில் சவுகான் நியமனம்
இதையடுத்து 9 மாதமாக இந்த பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் தான் முப்படைகளின் தலைமை தளபதியாக ஓய்வு பெற்ற லெப்டினன்ட் தலைமை தளபதி அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை இன்று மத்திய பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. இவர் முப்படைகளின் தலைமை தளபதி பொறுப்போடு மத்திய அரசின் ராணுவ விவகாரத் துறை செயலாளராகவும் பணியாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் யார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

40 ஆண்டு ராணுவ பணி
முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள அனில் சவுகான் 1961ல் மே மாதம் 18 ம் தேதி பிறந்தார். பள்ளி படிப்பை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் முடித்தார். அதன்பிறகு கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய இராணுவ அகாடமியில் மாணவராக பயிற்சி பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் 11 கோர்க்கா ரைபிள்ஸில் பிரிவில் சேர்ந்தார். அதன்பிறகு 40 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்றினார்.

கடந்த ஆண்டு ஓய்வு
இவர் கடந்த 2021 ம் ஆண்டு மே மாதம் கிழக்கு பிராந்திய தலைமை கமாண்ட் அதிகாரியாக லெப்டினன்ட் பணியாற்றி ஓய்வு பெற்றார். மே 2021 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு கிழக்கு இராணுவக் கட்டளைத் தலைவராக இருந்தார். இந்திய ராணுவ நடவடிக்கைகள் பிரிவு தலைமை இயக்குநராகவும், ஐ.நா சபை திட்டங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிராக..
அதன்பிறகு பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று இந்திய ராணுவத்தில் சேவை செய்தார். ராணுவத்தில் 40 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். இவர் காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகவும் திறம்பட செயல்பட்டார். இவர் மேஜர் ஜெனரல் பதவி வகிக்கும் போது வடக்கு மண்டல பாரமுலா பிரிவில் இருக்கும் காலாட்படைக்கு நியமிக்கப்பட்டர். பின்னர் அவர் வடகிழக்கு படைக்கு மாற்றப்பட்டார். 2019 செப்டம்பரில் கிழக்கு பிராந்திய காமாண்ட் அதிகாரியாக செயல்பட்டார்.

பல்வேறு பதக்கங்கள்
இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், தேசிய பாதுகாப்பு மற்றும் நலனில் அவர் தொடர்ந்து பங்களிப்பு செய்தார். இதனால் தான் இந்திய பாதுகாப்பு துறையில் தலைமை பதவியாக கருதப்படும் முப்படைகளின் தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் செய்யப்பட்டுள்ளா்ர. இவர் தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம், உத்தம் யுத் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், சேனா பதக்கம் மற்றும் விசிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications