”வரலாற்றை உங்களால் மாற்ற முடியாது” - அமித்ஷாவுக்கு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் காட்டமான பதிலடி
டெல்லி: வரலாற்றை மாற்ற முடியும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த நிலையில், உங்களால் வரலாற்றை மாற்ற முடியாது என பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்து இருக்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், "இந்தியாவை ஏராளமான மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கின்றனர்.
ஆனால், முகலாயர்கள் குறித்தே வரலாற்று ஆசிரியர்கள் அதிகம் பதிவு செய்து உள்ளார்கள். 800 ஆண்டுகள் பாண்டியர் மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கின்றனர்.
EXCLUSIVE: அமித்ஷா பேசியது சரி.. ஆனால், முகலாயரை ஒப்பிடுவதன் நோக்கம் வேறு? -எழுத்தாளர் மன்னர் மன்னன்
சோழர், பாண்டியர்
அசாமை சேர்ந்த அகோம் பேரரசு 650 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பல்லவ மன்னர்கள் ஆட்சி 600 ஆண்டுகள் நடைபெற்று உள்ளன. சோழர்கள் 600 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்து இருக்கின்றனர். மவுரிய பேரரசு ஆட்சி ஆப்கானிஸ்தான் தொடங்கி இலங்கை வரை 550 ஆண்டுகள் நடைபெற்று இருக்கின்றன. சாதவாகனர்களுடைய ஆட்சி 500 ஆண்டுகளும், குப்தர்களின் ஆட்சி 400 ஆண்டுகள் நடந்துள்ளன.
குப்தர், சிவாஜி வரலாறு
ஒருங்கிணைந்த இந்தியாவை அமைக்க குப்தர் வம்சத்தை சேர்ந்த சமுத்திர குப்தர் கனவு கண்டார். அவர் பற்றி எந்த வரலாற்றிலும் இடம்பெறவே இல்லை. முகலாயர்களுக்கு எதிராக வீரத்தோடு போராடிய மராட்டிய மன்னர் சிவாஜி, ராஜஸ்தான் மேவாட் பகுதியில் மன்னராக இருந்த பப்பா ராவல் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த முகலாயர்களை வீழ்த்தி விரட்டியடித்தார். வரலாற்றில் அவர் குறித்தும் எவ்விதமான தகவல்களும் இடம்பெறவில்லை.
சாவர்க்கர் எழுதிய புத்தகம்
சீக்கிய குருக்கள் தொடங்கி பலர் நாட்டிற்காக உயர் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் குறித்த வரலாறுகளையும் எழுத வேண்டும். 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டம் பற்றிய சாவர்க்கர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் மட்டும் அதை செய்யாவிட்டால் முந்தையகால வரலாற்றில் இடம்பெற்று இருக்கும் உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கும். நாட்டை ஆட்சி செய்த பண்டைய மன்னர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் ஏன் கவனம் செலுத்தவில்லை? இனியாவது அவர்களை பற்றி அதிகளவிலான புத்தகங்களை எழுதுங்கள்.
தவறான வரலாறு
அதுபோல் புத்தகங்கள் எழுதப்பட்டால் நாம் நம்பும் வரலாறுகளில் பல தவறானவை என்பதை உணர்வோம். ஏராளமான உண்மைகள் வெளிவரும். வரலாற்று ஆசிரியர்கள் இந்த பணிகளை தற்போதே தொடங்க வேண்டும். அந்நியர்களை எதிர்த்து போராடிய ராஜஸ்தான் மன்னர்கள் குறித்த புத்தகத்தை இன்று வெளியிட்டு உள்ளோம். இதனை எழுதிய ஓமேந்திர ரத்னுக்கு எனது வாழ்த்துக்கள். அவர் ராஜஸ்தானின் உண்மையான வரலாற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறார். வரலாறுகளை அரசு தரப்பில் வெளியிட்டால் சர்ச்சைகள் பல எழும். வரலாற்று அறிஞர்கள்தான் இதை செய்ய வேண்டும்.
நிதீஷ் குமார் மறுப்பு
இந்த நிலையில், பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நிதீஷ் குமார், "வரலாற்றை மாற்றுவீர்களா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. வரலாற்றை எப்படி ஒருவரால் மாற்றிட முடியும். வரலாறு என்பது எப்போதும் வரலாறாகவே இருக்கும். மொழி வேறு பிரச்சனை. ஆனால், அடிப்படையான வரலாற்றை உங்களால் மாற்றவே முடியாது." என்றார்.