பூஜை.. 'என்னை கூப்பிடாதீங்க..’ ஒன்றிய செயலாளரை கண்டித்த திமுக எம்.பி செந்தில்குமார்! பரபரப்பு
தருமபுரி : தருமபுரியில் நடந்த அரசு கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வில், பூஜைக்கு ஏற்பாடு செய்த திமுக ஒன்றிய செயலாளரிடம் எம்.பி செந்தில்குமார் கோபமாகப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி திமுக எம்.பி செந்தில்குமார் பூமி பூஜைக்காக வைத்திருந்த கற்களை காலால் உதைத்ததால் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த காரில் கிளம்பிய திமுக எம்.பி செந்தில்குமார், ஒரு மதம் சார்ந்த சடங்குகளை மட்டும் கடைபிடிப்பதாக இருந்தால் என்னை கூப்பிடாதீர்கள். ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை செய்ய வேண்டுமா என கோபமாகக் கேட்டுள்ளார்.
ஏற்கனவே இந்து மத சடங்கு மட்டும் நடப்பதற்கு எம்.பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அதேபோல பிரச்சனை நடந்துள்ளது.
9 ஆண்டு.. பெயரின்றி வளர்ந்த சிறுமி.. தெலுங்கானா முதல்வர் கேசிஆருக்காக காத்திருந்த தம்பதி! நெகிழ்ச்சி
அதியமான் கோட்டை
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன நூலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
காலால் தள்ளிய எம்.பி?
பூமி பூஜை முடிந்த பிறகு பூஜைக்கு வைத்திருந்த கல்லை திமுக எம்.பி செந்தில்குமார் காலால் தள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவே, திமுகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதுபோன்று செய்யும் எம்பி, நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என அங்கிருந்தவர்கள் முணுமுணுத்துள்ளனர்.
ஒன்றிய செயலாளரிடம் கோபப்பட்ட எம்.பி
இதையடுத்து எம்.பி செந்தில்குமார் காரில் ஏறிச் செல்லும்போது திமுக ஒன்றிய செயலாளர் சண்முகத்தை அழைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை கூப்பிடாதீர்கள் என கோபமாகக் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்னை கூப்பிடாதீங்க
இது அரசு நிகழ்ச்சி, அனைவருக்குமான நிகழ்ச்சி. ஒரு மதம் சார்ந்த சடங்குகளை மட்டும் கடைபிடிப்பதாக இருந்தால் என்னை கூப்பிடாதீர்கள். ஒவ்வொரு இடத்திலும் பிரச்சனை செய்ய வேண்டுமா என தருமபுரி எம்.பி செந்தில்குமார் திமுக ஒன்றிய செயலாளரிடம் கோபமாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்து மத சடங்கு
சில வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டத்தில் ஆலாபுரம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி எம்.பி செந்தில்குமார் பங்கேற்றார். அங்கு இந்து மதம் சார்ந்த சடங்குகள் மட்டும் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் கோபமாகப் பேசினார். அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்ற வழிகாட்டுதல்கள் இருக்கிறது என கோபமாகப் பேசினார்.
மீண்டும் சர்ச்சை
இந்து மதம் சார்ந்த பூஜை மட்டும் நடத்துறீங்க, சர்ச் பாதரையும் கூப்பிடுங்க, மசூதி இமாமை கூப்பிடுங்க என திமுக எம்.பி செந்தில் குமார் பேசியது தொடர்பான வீடியோவையும் ட்விட்டரில் வெளியிட்டார். இது இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தருமபுரி எம்.பி செந்தில்குமாரின் இந்த செயலுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மீண்டும் இந்து மதம் சார்ந்த பூஜைக்கு எம்பி செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.