எல்லாமே இனிமேல் நல்லா தான் நடக்கும்! அன்புமணி ராமதாஸுக்கு தருமபுரி கொடுத்த நம்பிக்கை! ஓட்டாக மாறுமா?
தருமபுரி : தருமபுரி காவிரி உபரிநீர் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள் நடைபயண பிரச்சாரத்தினை அன்புமணி ராமதாஸ் தொடங்கிய நிலையில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் பாமகவினர் உற்சாக அடைந்துள்ள நிலையில், அது தேர்தலில் வாக்குகளாக மாறிமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
Recommended Video
தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற, வலியுறுத்தி மூன்று நாள் நடைபயணம் பிரச்சாரத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நேற்று ஒகேனக்கலில் தொடங்கியுள்ளார்.
இன்று இரண்டாவது நாள் பிரச்சாரம் தொடங்கியதில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியினரும், பொது மக்களும் உற்சாக வரவேற்பை அளித்துள்ளனர். ஒவ்வொரு இடமாக நடந்து சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அன்புமணி ஈடுபட்டார்.
’காவிரி’ மூலம் டெல்லிக்கு ரூட் போட்ட அன்புமணி! கிருஷ்ணர் முதல் மசூதி வரை! ஒகேனக்கலில் காட்டிய மாஸ்!
அன்புமணி ராமதாஸ்
குரும்பட்டி டீ கடை பகுதியில் ஒவ்வொரு கடையாக ஏறி சென்று துண்டு பிரசுரங்களை வழங்கிய போது, டீக்கடைக்காரர் ஒருவர் டீ சாப்பிடுங்க என்றதும், உடனடியாக போட்டுக் கொடுத்த டீயை வாங்கி குடித்துவிட்டு, பிரசாரத்தின் நோக்கத்தினை, திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி டீக்கடைக்காரர் குடும்பத்தினரிடம் எடுத்துரைத்தார். அதே பகுதியில் வெங்காய வியாபாரி ஒருவர் நின்று இருக்க, அவரிடம் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் ஏன் இதற்கு நடை பயணம் விழிப்புணர் பிரச்சாரம் மேற்கொள்கிறேன் என்பதை பற்றியும் விளக்கி கூறினார்.
பாமகவின் உற்சாகம்
நடுப்பட்டி என்னும் இடத்தில் பெண்கள் அன்புமணியை சூழ்ந்து கொள்ள, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, அவர்களின் மொபைல் ஃபோனில் அன்புமணியே செல்ஃபி பிடித்துக் கொடுத்தார். தொடர்ச்சியாக கடத்தூரில் ஒன்றரை கிலோ மீட்டருக்கும் மேலாக மலர் தூவி அன்புமணியை வரவேற்றனர். மேலும் அங்கே சிலம்பாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தியும் பிரச்சாரத்தில் இருந்தவர்களையும், பொதுமக்களையும் கலையாமல் பார்த்துக் கொண்டனர் பாட்டாளி மக்கள் கட்சியினர். கடத்தூரில் கூட்டத்தை கண்ட அன்புமணி மேடையை விட்டு இறங்கி வந்து கூட்டத்தினருடன் ஐக்கியமாகிவிட்டார். கூட்டத்தின் நடுவே நின்று பேச ஆரம்பித்து விட்டார்.
காவிரி உபரி நீர் திட்டம்
நத்தமேடு பகுதியில் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் என அன்புமணியை பாமகவினர் வரவேற்ற நிலையில், ஒவ்வொரு இடங்களிலும் காவிரி உபரி நீர் திட்டத்தை நாம் ஏன் செய்ய வேண்டும்? இந்த திட்டத்தினை நிறைவேற்றினால் எவ்வளவு பேர் பயனடைவார்கள்? இதனால் தர்மபுரியில் தீரக்கூடிய பிரச்சனைகள் என்ன? என்பதை விளக்கி கூறினார். அதோடு ஒவ்வொரு ஊரிலும் துண்டு பிரசுரங்களையும் அன்புமணியே நேரில் சென்று ஒவ்வொருவரிடம் வழங்கி வருகிறார். நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாகவும் செல்லும் இடங்களில் எல்லாம் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்புகள் கிடைப்பதாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.
ஓட்டாக மாறுமா?
அதே நேரத்தில் அன்புமணியின் இந்தப் பயணம் தேர்தல் அரசியலுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் செந்தில்குமாரிடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து அவர் மாநிலங்களவை சார்பில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் நேரடி அரசியலில் அவர் பின்தங்கியதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தர்மபுரி பயணம் தேர்தல் அரசியலை அன்புமணி ராமதாஸுக்கு வரும் தேர்தலில் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.