தலைமையின் கோபம் ஏன்?-அன்வர் ராஜா நீக்கம் இதுதான் காரணமா?
அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் அன்வர்ராஜா. விளக்கம் கேட்பு, சஸ்பெண்ட் எதுவுமில்லாமல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது கட்சிக்குள் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா காலத்து ஆளான அன்வர்ராஜா நீக்கம் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாகாலத்து தொண்டர் அன்வர்ராஜா
1965 ஆம் ஆண்டு மாணவர் திமுக மூலம் கட்சிக்குள் வந்தவர் அன்வர்ராஜா. அண்ணா தலைமை, கருணாநிதி தலைமை, எம்ஜிஆர் நீக்கத்துக்குப்பின் எம்ஜிஆர் தலைமையேற்று அதிமுகவுக்குள் அடியெடுத்து வைத்தவர் அன்வர்ராஜா. எம்ஜிஆர் மன்ற தலைவராக இருந்தவர். 1986-ல் அதிமுகவில் அமைக்கப்பட்ட ஆட்சிமன்ற குழுவில் 15 பேர்களில் ஒருவராக அன்வர்ராஜா நியமிக்கப்பட்டவர். 13 பேர் அமைச்சர்கள், 14 வது நபர் ஜெயலலிதா, 15 வது நபர் அன்வர்ராஜா.
செல்வாக்குமிக்க தலைவர்களில் ஒருவரான அன்வர்ராஜா
அப்படிப்பட்ட மூத்த நிர்வாகி தென்மாவட்டத்தில் அதிமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவர். எம்.பியாக ஜெயலலிதாவால் அடையாளம் கட்டப்பட்டவர். சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப்பின் மூத்த தலைவரான அன்வர்ராஜா எடப்பாடி பழனிசாமி பக்கம் நின்றார். ஆனால் காலச்சூழல் அவர் எடப்பாடியுடன் முரண்பட்டு நிற்கும் நிலை ஏற்பட்டது.
ஜெயலலிதா வழியிலியிருந்து நகர்ந்த அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக பாஜகவுடன் இணக்கமானது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை பாஜகவுடன் கூட்டு இல்லை என்கிற நிலைப்பாட்டிலும், அதிமுக தனித்து நிற்கும் என்கிற நிலைப்பாட்டிலும் உறுதியாக இருந்தார். அவரது மறைவுக்குப்பின் அதிமுக பாஜகவுடன் இணக்கமானது. இதில் ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த நீட் நுழைவுத்தேர்வு, உதய் மின் திட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளை அதிமுக ஆதரித்தது.
மாநிலங்கவையில் முரண்பாடு
இதில் ஒருபடி மேலேச்சென்று சிஏஏ உள்ளிட்ட சட்டங்களை அதிமுக ஆதரித்து வாக்களித்தது அதிமுகவுக்கு பின்னடைவானது. அப்போது மாநிலங்கவையில் அன்வர்ராஜா அதை எதிர்த்து பேசினார். 2019 மக்களவை தேர்தலில் அன்வர்ராஜா ஓரங்கட்டப்பட்டார். பாஜகவுக்கு ராமநாதபுரம் தொகுதி வழங்கப்பட்டது, திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி வெற்றிப்பெற்றார்.
தலைமையுடன் முரண்பாடு
அன்வர்ராஜா ஆரம்பம் முதலே தலைமையுடன் முரண்பட்டு நின்றார். அதிமுக அம்மா கால அதிமுகவாக தனித்து இயங்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். ஒற்றைத்தலைமை வேண்டும், அதிமுக இன்னமும் எம்ஜிஆர், ஜெயலலிதா செல்வாக்கால் தான் வெல்கிறது என்கிற வாதம், சசிகலாவை ஏற்றால் என்ன என்கிற ரீதியில் அவர் அணுகியதே நீக்கத்துக்கான காரணம் என்கின்றனர்.
சமாதானமாக முடிந்த கூட்டத்தில் விளக்கம் கேட்காமல் நீக்கம் சரியா?
அன்வர்ராஜாவுக்கும், சி.வி.சண்முகத்துக்கும் மோதல் ஏற்பட்டாலும் அது எடப்பாடிக்கு எதிராக அன்வர்ராஜா ஒருமையில் பேசிய பேச்சுக்குறித்த பிரச்சினை அதை தான் தவறுதலாக பேசிவிட்டேன் என அன்வர்ராஜா கூட்டத்தில் அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டதாக பின்னர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Recommended Video
விளக்கம் கேட்காமல் நீக்கம் காரணம் இதுதானா?
அப்படி இருக்கும்போது திடீரென நீக்கவேண்டிய காரணம் என்ன சமாதானமாக முடிந்த கூட்டத்திற்கு பின் நீக்கம் முடிவு ஏன், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யாமல் நேரடி நீக்கம் ஏன் என்பது அதிமுக நிர்வாகிகள் சிலரின் முணுமுணுப்பாக உள்ளது. கட்சிக்குள் ஒற்றைத்தலைமை, ஜெயலலிதா வழியில் தனித்துப்போட்டி போன்றவைகள் குறித்து அன்வர்ராஜா பேசியது அவர் மீது தலைமைக்கு கோபமா? மாற்றுக்கருத்துகள் நீக்கத்துக்கு காரணமாக அமையுமா என்ற கேள்வியும் அரசியல் விமர்சகர்களால் வைக்கப்படுகிறது.