லாரி ஓட்டுநரின் ஒரு நொடி தவறு.. டாக்டர் உள்பட 3 பேரின் உயிரை பறித்த விபத்து.. ஈரோட்டில் சோகம்
ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காடப்பநல்லூர் பகுதியில் லாரி கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் டாக்டர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். பவானி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர், உடையானூர் பகுதியில் வசிக்கும் தேவநாதன் (52) தனியார் நிறுவன மேனேஜர். இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பின்னர் நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் வகையில் வோள்ஸ் வேகன் காரில் தனது மனைவி இந்திராணி (50) (வனவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர்) உறவினர் மேட்டூர், மேச்சேரி சுப்பிரமணியன் நகர் பகுதியைச் சேர்ந்த சத்தியசீலன் (33) ஆகிய மூவரும் கோவையில் இருந்து பவானி வழியாக மேச்சேரி சென்று கொண்டிருந்துள்ளனர்.

உயிரிழப்பு
தேவநாதன் ஓட்டி வந்த கார் பவானி அருகிலுள்ள சித்தார், காடப்பநல்லூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மேட்டூரில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி அதிவேகமாக வந்து காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தீயணைப்பு துறை
இதனைத் தொடர்ந்து பவானி போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று காரில் இடிபாடுகளில் இறந்து கிடந்த மூன்று பேரின் உடல்கள் மீட்டு பிரேத பரிசோதனை செய்ய பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்ததால் அவரை பவானி போலீசார் தேடி வருகிறார்கள்.

போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள். தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

பேருந்து சேதம்
திம்பம் மலைப்பாதை 22-வது கொண்டை ஊசி வளைவு அருகே பேருந்து சென்றபோது மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை மற்றொரு சரக்கு லாரி முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிரே வந்த அரசு பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் லாரி மோதியதில் அரசு பேருந்தின் பக்கவாட்டுப் பகுதியில் பேருந்து சேதமடைந்தது.

போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 40க்கு மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். மலைப்பாதையில் அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏற்றி சத்தியமங்கலத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications