ஈரோடு கிழக்கு.. வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்.. அடித்து ஆடும் திமுக கூட்டணி.. அப்போ அதிமுக?
வேட்புமனுவை திரும்ப பெற பிப்ரவரி 10 கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறும்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 அன்று கடைசி நாளாகும்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் கடந்த ஜனவரி 4ம் தேதி காலமானார். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு
அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டசபை செயலாளர் இந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிவித்து விட்டார். இதையடுத்து தற்போது, இந்திய தேர்தல் ஆணையமும் இந்த தொகுதியை காலி என்று அறிவித்துள்ளது. தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். பொதுவாக இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தலுக்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

வேட்புமனு
வேட்புமனுவை திரும்ப பெற பிப்ரவரி 10 கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு இடைதேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 அன்று நடைபெறும். இன்னொரு பக்கம் திரிபுரா சட்டசபைக்கு பிப்ரவரி 16-ந் தேதி தேர்தல் நடக்கும். நாகாலாந்து, மேகாலயா சட்டசபைக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடக்கும். 3 மாநில சட்டசபை தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொகுதி மறுவரையறை
இந்த ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பளார் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்
இந்த முறை திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் ஒருவரை களமிறக்க உள்ளது. அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தரப்பும் ஒரு வேட்பாளரை களமிறக்க போவதாக அறிவித்து உள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சிவபிரசாந்த் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில், மேனகா நவநீதன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications