ஈரோடு கிழக்கில் அதிமுக தனித்து போட்டி! செங்கோட்டையன் சொன்னதை கவனிச்சீங்களா! அப்போ பாஜக?ட்விஸ்ட்
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அதிமுக தனித்து போட்டியிடுவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று கூறினார். இதனால் பாஜக ஆதரவு இருக்கிறதா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி தேர்தல் குறித்து இன்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக தனித்து களமிறங்கி உள்ளது என அவர் தெரிவித்தார். இந்த வேளையில் ‛பாஜக ஆதரவு அளிக்கிறதா?' என கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு செங்கோட்டையன் பரபரப்பான பதிலை கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம், நேற்று என 2 நாள் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். இன்றும் கட்சி நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். அநேகமாக இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தீவிர ஆலோசனை! எடப்பாடி தரப்புக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளர் யார்?
எடப்பாடி பழனிச்சாமி வியூகம்
எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டியாக ஓ பன்னீர் செல்வமும் வேட்பாளரை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி விடவில்லை. இரட்டை இலை சின்னத்தை பெறும் வகையில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால நிவாரணத்தை எடப்பாடி பழனிச்சாமி கோரியுள்ளார். மேலும் இதற்காக தான் அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழுவை எடப்பாடி பழனிச்சாமி அமைத்து வியூகம் வகுத்து வருகிறார்.
117 பேருடன் தேர்தல் பணிக்குழு
முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையன் தலைமையில், 117 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், தங்கமணி, எஸ்பி வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், டி.ஜெயக்குமார் சி.வி.சண்முகம், செம்மலை, கே.வி.ராமலிங்கம் மற்றும் மு.தம்பிதுரை எம்.பி., தற்போதைய எம்எல்ஏக்கள் என ஏராளமானவர்கள் அதில் இடம்பெற்றுள்ளனர்.
தேர்தல் முடிவு பற்றி எதிர்பார்ப்பு
இந்நிலையில் தான் இன்று ஈரோட்டில் முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழுவுக்கு தலைமையேற்றுள்ள செங்கோட்டையன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான முதல் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளோம். தேர்தல் முடிவு எப்படி வரப்போகிறது என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் வாழும் தமிழர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
எம்ஜிஆர் போல்...
இந்த தேர்தலை பொறுத்தவரை பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் உருவாக்கும். திண்டுக்கல் தேர்தலில் எம்ஜிஆர் திருப்புமுனையை உருவாக்கியதுபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி தலைமயில் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்றாக இருக்கும். அந்த அளவில் தான் மக்கள் மனநிலை உள்ளது. மக்களிடம் பேசுகிறபோதும் சரி, களப்பணி ஆற்றி வரும் அத்தனைபேரும் சொல்லும் கருத்துகளும் சரி ஒன்றாக தான் இருக்கிறது.
அதிமுக தனித்து போட்டி
இந்த தேர்தல் தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும். அதிமுக தனித்தே களத்தில் நிற்கிறது. கூட்டணியில் அமைய உள்ள கட்சிகள் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களிலும் எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்க உள்ளார். இன்று எல்லோரும் இந்த அணி இப்படி பிரிந்து உள்ளதே? என சொல்கிறார்கள். ஆனால் 99.5 சதவீதம் பேர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஓரணியில் உளே்ளாம்.
பாஜக ஆதரவு இருக்கிறதா?
இந்த தேர்தல் வெற்றி என்பது சரித்திரம் படைக்கும் வகையில் அமையும். இரட்டை இலை சின்னம் தொடர்பாக 2 , 3 நாட்களில் நல்ல முடிவு வரும். நேற்று மதியமே தேர்தல் பணிக்குழுவினர் தொகுதிக்கு வந்துவிட்டனர்'' என்றார். இந்த வேளையில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவு அளிக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‛‛பொறுத்திருந்து பாருங்கள்'' என பதிலளித்தார்.
ஏன் இப்படி சொல்கிறார்?
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கமலாலயம் சென்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர். அதேபோல் ஓ பன்னீர் செல்வமும் கமலாலயம் சென்று தனது அணிக்கு ஆதரவு கோரினார். இதில் பாஜக இன்னும் எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தான் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.