"திமுகவை வீழ்த்துவதே முதல் நோக்கம்.." அப்படியே அதிமுக விவகாரம் குறித்தும் பாஜக கே.பி.ராமலிங்கம் பரபர
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் ஈரோட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக விஷயம் தொடங்கிப் பல விஷயங்கள் குறித்தும் அவர் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அத்துடன் ஈரோட்டிற்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பிப்.27ஆம் தேதி ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜன.31 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வைத் தொடங்கியுள்ளது.
எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? ஈரோடு கிழக்கில் பாஜக ஆதரவு எந்த அணிக்கு.. அவங்களுக்குத்தான் அதிக சான்சாமே?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கே ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவார் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. எடப்பாடி தரப்பு ஒரு பக்கம் தாங்கள் போட்டியிடுவதாக அறிவித்து கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவைக் கோரி வருகிறார்கள்.
பாஜக ஆலோசனை
அதேபோல ஓபிஎஸும் தான் வேட்பாளரை இறக்க உள்ளதாகவும் அதேநேரம் பாஜக வேட்பாளரை அறிவித்தால் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருந்தார். தேர்தலில் போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று பாஜக இதுவரை எந்தவொரு நிலைப்பாட்டையும் அறிவிக்கவில்லை.. இதற்கிடையே ஈரோட்டில் உள்ள பாஜக அலுவலகத்தில், இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கே.பி.ராமலிங்கம்
இதில் கலந்து கொண்ட அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், "நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளரைத் தோற்கடிக்கும் திட்டங்கள் குறித்து கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஈரோடு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
அதிமுக விவகாரம்
இடைத்தேர்தலில் பாஜக நேரடியாகப் போட்டியிடுமா அல்லது கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு தருமா என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. இது பற்றிய முடிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் அறிவிப்பார். இப்போது இரண்டு பிரிவாக இருக்கும் அதிமுக ஒன்று சேர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதேநேரம் அவர்களை மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் நாங்கள் இறங்க மாட்டோம். எங்கள் வேலை அது இல்லை..
திமுகவை தோற்கடிப்பதே நோக்கம்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ஓ. பன்னீர்செல்வம் எங்களுக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். இன்னும் காலம் இருக்கிறது. அவர்கள் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியைத் தோற்கடிக்க அனைத்து வியூகங்களையும் எடுப்போம்.
திமுக அரசு
கடந்த இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சியில் அரங்கேறிய ஊழல்களைச் சொல்லி மக்களிடம் வாக்குகளைச் சேகரிப்போம். குடும்ப அரசியல் குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறுவோம்.. இடைத்தேர்தலில் பாமக என்ன நிலைப்பாட்டை வேண்டுமென்றாலும் எடுக்கலாம். இருப்பினும், அவர்கள் எங்கள் கூட்டணியில் தான் உள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் போட்டியிடுவார் என்பதில் குழப்பம் தொடரும் நிலையில், கே.பி.ராமலிங்கத்தின் இந்தப் பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.