‛உளவுத்துறை’.. இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி ஏன்? வந்து விழுந்த கேள்வி.. ஆ ராசா விளக்கம்
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார். மேலும் அவரது மகன் சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு கேட்ட நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவனே இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் திமுகவின் பரிந்துரை உள்ளதாக கூறப்படும் நிலையில் அதுபற்றி அக்கட்சியின் எம்பியும்,கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆ ராசா விளக்கம் அளித்துள்ளார்.
2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், மாஜி தமிழக காங்கிரஸ் தலைவராகவும் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
இந்நிலையில் தான் திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியானது. அடுத்த 6 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெள்ளாளர் முன்னேற்ற கழகம் அதிரடி! வேட்பாளர் அறிவிப்பு.. யாரு பாருங்க!
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு
அதன்படி பிப்ரவரி 27ம் தேதி ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடலாம் என கூறப்பட்டது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி
இருப்பினும் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட மறுத்தார். மாறாக தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் சஞ்சய் சம்பத்தும் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்ப மனு செய்தார். இந்நிலையில் தான் இறுதியாக சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். தேர்தலில் போட்டியிடவில்லை என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறிய நிலையில் அவரை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கிவிட்டுள்ளது.
திமுக பரிந்துரை?
அதாவது 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இதுவாகும். இதில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டியது கட்டாயமாகும். ஏனென்றால் இத்தேர்தலின் முடிவு, திமுக அரசின் கவுரவம் சார்ந்தது. அதோடு கடந்த 2 ஆண்டுகளாக ஆளும் திமுக அரசுக்கு மக்கள் அளிக்கும் தீர்ப்பாகவே இது பார்க்கப்படும். இதனால் செல்வாக்கு மிக்க மற்றும் மக்களுக்கு பரீட்சயமான நபரை களமிறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவே ஈவிகேஎஸ் இளங்கோவன் பெயரை பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சம்பிரதாயம் என ஆ ராசா பேட்டி
ஈரோடு திருமங்கலத்தில் திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ ராசா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். அதற்கு ஆ ராசா பதில் அளித்தார். இதுதொடர்பான விபரம் வருமாறு: பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆ ராசா, ‛‛அது ஒரு சம்பிரதாயம் தான் எங்களுக்கு. காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற செய்வோம்'' என்றார்.
இளங்கோவன் போட்டி ஏன்?
இதையடுத்து இன்னொரு பத்திரிகையாளர், ‛‛இளைய சமுதாயத்துக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டிருந்தார். ஆனால் முதல் அமைச்சர், ஈவிகேஎஸ் இளங்கோவனை நிறுத்த பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறதே?'' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆ ராசா, ‛‛முதல் அமைச்சரிடம் சில தகவல்கள் இருக்கும். அவரிடம் உளவுத்துறை உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் முதல்வர் பேசியிருக்கிறார். அதனால் என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது. இருப்பினும் தற்போது அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி. தற்போது அவர் போட்டியிடுவதை ஏற்றுக்கொண்டுள்ளார். மனநிறைவாக பணியாற்றி வெற்றி பெற செய்வோம். '' என்றார்.