மனைவி, மகனை பறிகொடுத்துவிட்டு.. அத்தனை துக்கத்திலும் களத்திற்கு வந்த திமுக எம்எல்ஏ.. நெகிழ்ச்சி உதவி
ஓசூர்: கடந்த வாரம் கார் விபத்து ஒன்றில் மகனை பறிகொடுத்த ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் நேற்று இளைஞர் ஒருவருக்கு அவசர நிதி உதவி செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் நடந்த கார் விபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மகன் உட்பட 7 பேர் கடந்த வாரம் உயிரிழந்தனர். பெங்களூர் கோரமங்களா பகுதியில் இந்த கார் விபத்து ஏற்பட்டது. சொகுசு காரில் இரவு நேரத்தில் வேகமாக வந்த போது கார் சாலை நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கார் மிக வேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் 4 ஆண்கள் 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியானார்கள். 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாக ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

யார்
இந்த விபத்து நடந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். முதலில் விபத்தில் பலியானது யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. சில நிமிடங்களுக்கு பின்பே விபத்தில் பலியானது ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகனான கருணா சாகர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு 28 வயதாகிறது. கோரமங்களா பகுதிக்கு நண்பர்களோடு சென்றுவிட்டு திரும்பிய போது இவருக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.

மனைவி
சரியாக 4 மாதங்களுக்கு முன்புதான் பிரகாஷ் எம்.எல்.ஏ.வின் மனைவி சிவம்மா உடல்நலக் குறைவால் பெங்களூா் தனியாா் மருத்துவமனையில் காலமானார். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி காலமானாா். இவர் மரணம் அடைந்து 4 மாதத்தில் மகனையும் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் பறிகொடுத்துள்ளார். குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு பேரை பறிகொடுத்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் உடைந்து போய் இருந்தார்.

மீண்டும் பணி
மகனின் மரணத்தை தொடர்ந்து இரண்டு நாட்கள் வீட்டிற்கு உள்ளேயே இருந்தவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில்தான் நேற்று மீண்டும் கட்சி பணிகளில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் களமிறங்கி உள்ளார். ஓசூரில் மக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கட்சி நிர்வாகிகளிடம் பேசி தொகுதி நிலவரம் குறித்தும், முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

நெகிழ்ச்சி
இந்த நிலையில் நேற்று இளைஞர் ஒருவருக்கு எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் உதவி செய்தது பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஓசூர் பகுதியை சேர்ந்த சாரதி என்ற இளைஞர் தேசிய கபடி கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட உள்ள 19 வயது கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார். நேபாளத்தில் நடக்க உள்ள இந்த போட்டிக்கு செல்ல நிதி இன்றி சாரதி கஷ்டப்பட்டு இருக்கிறார். எப்படி நேபாளம் செல்வது என்று தெரியாமல் கஷ்டப்பட்டு உள்ளார்.

உதவி
இந்த விஷயம் தெரிந்த எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் உடனே சாரதியை நேற்று அழைத்து அவருக்கு நிதி உதவி அளித்தார். அவருக்கு தேவையான பணம் மற்றும் மற்ற உதவிகளை உடனே வழங்கி இருக்கிறார். மனைவி, மகனை இழந்துவிட்டு, அத்தனை சோகத்திலும் எங்கோ இருக்கும் ஒரு இளைஞரின் விளையாட்டு கனவிற்காக இவர் நிதி உதவி கொடுத்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் மிகவும் சோகமாக காணப்பட்டார். கண்கள் லேசாக வீங்கி, அயற்சியாக காணப்பட்டார். அத்தனை துக்கத்திலும் இப்படி மீண்டும் களமிறங்கி கட்சி மற்றும் மக்கள் பணிகளை இவர் மேற்கொண்டது மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications