நபிகள் பற்றி சர்ச்சை பேச்சு.. பாஜக எம்எல்ஏவிற்கு ஒரே நாளில் ஜாமீன்.. ஹைதராபாத்தில் வெடித்த போராட்டம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சில மணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து அவருக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஏற்கெனவே பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக செயல்பட்டு வந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததையடுத்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு மேலெழுந்தன.
இதனையடுத்து அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இதேபோல பாஜக எம்எல்ஏ ஒருவர் சர்ச்சை கருத்தை தெரிவித்ததுள்ளதையடுத்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

வீடியோ
கோஷ்மால் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜா சிங். இவர் சமீபத்தில் "ஃபாருகி கே ஆக கா இதிஹாஸ் சுனியே" எனும் வீடியோ ஒன்றை தெலுங்கானாவின் யூடியூப் சேனலான ஸ்ரீ ராம் எனும் தளத்தில் வெளியிட்டிருந்தார். 10.27 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மா தெரிவித்திருந்த கருத்தை போலவே இஸ்லாமியர்களின் புனிதரான நபிகள் நாயகம் குறித்தும் அவதூறு கருத்தை கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது.

புகார்
திங்கட்கிழமை வெளியான இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜா சிங்குக்கு எதிராக கடும் விமர்சனங்கள் மேலெழுந்தன. காவல் நிலையங்களில் அவருக்கு எதிராக தொடர் புகார்கள் கொடுக்கப்பட்டன. பஷீர்பாக்கில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் ராஜாவுக்கு எதிராக சாலை மறியலில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அவர் அம்மாநில காவல்துறையால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது
எம்எல்ஏ ராஜா மீது இந்திய தண்டனைச் சட்டம் 295(ஏ), 153(ஏ), 505 (1) (பி) மற்றும் 505 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டாலும், அதற்கு முன் உரிய நடைமுறை பின்பற்றப்படவில்லை எனக் கூறி நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இது மேலும் பதற்றத்தை அதிகரித்தது. ஆனாலும் அவர் பாஜவிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டதாக கட்சி அறிவித்தது. மேலும், அவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கக்கூடாது என கேள்வியெழுப்பி அதற்கு 10 நாட்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றும் கூறியது.

பேரணி
ஆனாலும் நிலைமை சீரடையவில்லை. நேற்று மாலை தொடர்ந்து ராஜா சிங்கிற்கு எதிராக போராட்டங்கள் தொடர்ந்தன. சார்மினாரின் ஷாலிபண்டா, மொகல்புரா, கில்வாட் ஆகிய பகுதிகளில் மக்கள் போராட்டத்திற்கு பெரும் அளவில் திரண்டனர். கடையடைப்புகள், கல் வீச்சுகள் நடந்தன. இருந்தாலும் இந்த பிரச்னை பெரியதாக வெடிக்கவில்லை. ஆனால் நிலைமை இதேபோல நீடிக்கவில்லை, இன்று அதிகாலை ராஜாவின் வீட்டை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியை தொடர்ந்தனர்.

உருவ பொம்மை எரிப்பு
இந்த பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ராஜாவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த இந்த பகுதிகளில் காவல்துறையினர் ஏராளமான அளவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஹைதராபாத் பகுதியில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. ஏற்கெனவே நுபுர் சர்மா இதேபோல சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில் நாடு முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications