ஒரு பக்கம் ரெட்டி.. இன்னொரு பக்கம் கல்யாண்.. இருவருக்கும் இடையே சிக்கி முட்டி மோதும் நாயுடு!
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடுவின் முதல்வர் கனவுகள் ஒய் எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் வளர்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டு வருகிறது! மறுபக்கம் பவன் கல்யாணின் வேகமாக வளர்ச்சியும் தெலுங்கு தேசத்திற்கு மண்டை இடியாக மாறி வருகிறதாம்.
ஆந்திராவை பொறுத்தவரை தெலுங்கு தேசம், காங்கிரஸ், பாஜக கட்சிகள் மிக தீவிரமாக களத்தில் இறங்கி உள்ளது. இதில் மாமனாரிடம் இருந்து கட்சியை பிடுங்கி கொண்டார் என்ற தாறுமாறு விமர்சனங்களையும் தாண்டி ஒரு ஹைடெக் ஆட்சியை நிர்வாகம் செய்து காட்டினார் சந்திரபாபு நாயுடு.
தன் மாநிலத்தை தாண்டி அகில இந்திய அளவில் நம்ம ஊர் காமராஜரை போல கிங் மேக்கராக உருவெடுத்தார். இதற்கு காரணம் அவரிடம் இருந்த நிர்வாகத்திறமையும் மற்றும் எதையுமே பட்டென போட்டு உடைத்துவிடும் தைரியமும்தான்! அதனால்தான் திரும்பவும் நாயுடு முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஒய்எஸ்ஆர் கட்சி
எனினும், ஜெகன்மோகன் ரெட்டியின் வருகையும், வளர்ச்சியும் அபரிமிதமானது. எந்த கட்சி தன்னை ஒதுக்கியதோ, அதே கட்சியான காங்கிரசுக்கு எதிராக இன்று வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி. ஒரு பக்கம் காங்கிரசுக்கு கிலி என்றால், மறு பக்கம் தெலுங்கு தேச கட்சியை அசைத்து பார்க்கும் அளவுக்கு ஒய்எஸ்ஆர் கட்சி வளர்ந்துள்ளது என்பதுதான் உண்மை! அதனால்தான் நாயுடுக்கு போட்டியாக இவர் இப்போது பார்க்கப்படுகிறார்.
ஜீவிதா, ரோஜா
ஜெகன் மோகன் கட்சிக்கு சினிமா கட்சி என்ற ஒரு முத்திரை இருந்தாலும், அதுவே அக்கட்சிக்கு பலத்தையும் தந்து வருகிறது. ஏற்கனவே அங்கு ரோஜா இருக்கிறார். இப்போதும்கூட ஜீவிதா உள்ளிட்டவர்கள் கட்சியில் இணைந்து வருகிறார்கள். இதனால் மக்களிடம் ஒரு பெரிய செல்வாக்கு இக்கட்சிக்கு தானாகவே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
தலித் ஓட்டுக்கள்
ஆனால் இதில் கொஞ்சமும் எதிர்பாராத விஷயம் என்றால், பவன் கல்யாண் வருகைதான். காப்பு சமூகத்தினர் ஆந்திராவில் நிறைய இருந்தாலும், இளைஞர்களின் ஆதரவை பெருமளவில் கவர்ந்து வருகிறார் பவன் கல்யாண். ஜாதீய ஓட்டுக்களும், தலித் ஓட்டுகளும் இவருக்கு சாதகமாக அங்கு உருவாகி உள்ளது.
கவுரவ பிரச்சனை
இதனால் நாயுடு ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். பாஜகவை பகிரங்கமாக விமர்சித்தும் நாயுடுக்கு போதிய பலம் கிட்டவில்லை.. காங்கிரசுடன் நெருங்கி சென்றும் போதிய பலம் கிட்டவில்லை.. முன்பு போல நாயுடுவாலும் தீவிர பிரச்சாரத்தில் ரவுண்டு கட்டி அடிக்க முடியவில்லை. இருந்தாலும் புதிதாக உருவெடுத்துள்ள இரு புள்ளிகளை வீழ்த்த தெலுங்கு தேசம் தீவிரத்தை கையில் எடுத்துள்ளது. இருக்கும் செல்வாக்கையும் தக்கவைக்க போராடி வருகிறது. தோற்றுவிடக்கூடாது என்ற மிகப்பெரிய கவுரவ பிரச்சனையும் எழுந்துள்ளது.
நாயுடுவுக்கு தலைவலி
ஒருவேளை ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரசேகர் ராவுடன் ஏதாவது கூட்டணி வைத்துவிட்டால்.. மொத்தமும் முடிந்தது! அதனால் நாயுடுக்கு ஒரு பக்கம் ரெட்டியும், இன்னொரு பக்கம் பவன் கல்யாணும் சேர்ந்து நெருக்கத்தை தர ஆரம்பித்துள்ளது பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.