ஃபெயிலான “ஆபரேசன் தாமரை”.. எம்எல்ஏக்களிடம் ரூ.100 கோடி டீல்! கைது செய்ய தெலுங்கானா ஹைகோர்ட் உத்தரவு
ஐதராபாத்: தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். எம்.எல்.ஏக்களை ரூ.100 கோடிக்கு வாங்க பாஜக பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தெலுங்கானாவில் சந்திர சேகர் ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திராவிலிருந்து தெலுங்கானா தனிமாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்தே சந்திரசேகர் ராவ்தான் முதலமைச்சராக உள்ளார்.
இம்மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிர பணியாற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் தேசிய செயற்குழு கூட்டத்தை பாஜக கூட்டியது.

தென்னிந்திய மாநிலங்கள்
அந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேசன் சவுத் இந்தியாவை அறிவித்தார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானாவிலும் பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என அவர் முழங்கினார். அதன் தொடர்ச்சியாக அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் தொடர்ந்து தெலுங்கானா மாநிலத்துக்கு சென்று வருகின்றனர்.

சந்திரசேகர் ராவ்
இதற்கு மத்தியில் ஆளும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர் மத்திய பாஜக அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிர்க்கட்சித் தலைமையை உருவாக்க அவர் முயன்று வருகிறார். இதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன் தேசிய கட்சியை உருவாக்கினார்.

குதிரை பேரம்
இந்த நிலையில்தான் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்.எல்.ஏக்கள் 4 பேரை வாங்க பாஜக பேரம் பேசிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக வெளியான 2 ஆடியோக்கள் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.எல்.ஏ புகார்
தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏக்களான ரோகித் ரெட்டி, பீராம் ஹர்ஷவர்தன், காந்தாராவ், பாலா ராஜு ஆகியோருக்கு தலா ரூ.50 கோடி வரை கொடுத்து விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் சைபராபாத் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

உயர்நீதிமன்றம் உத்தரவு
இது தொடர்பாக வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 3 பேரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது. இந்த நிலையில் இன்று அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சதீஷ் சர்மா, கே.நந்தகுமார், சிம்ஹயாஜுலு ஆகியோரை கைது செய்து 24 மணி நேரத்துக்குள் சைபராபாத் காவல் ஆணையர் முன் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications