5.5மீ நீளம்.. 37கி எடை.. பீரங்கி மாதிரி கம்பீரத் தோற்றம்.. கின்னஸ் சாதனை படைத்த பால்பாயிண்ட் பேனா!
உலகிலேயே மிகப் பெரிய பால்பாயிண்ட் பேனாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர்.
ஹைதராபாத்: உலகின் மிகப் பெரிய பால்பாயிண்ட் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார் தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர்.
வித்தியாசமான முயற்சிகள் செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவது பலரது கனவு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் தெலுங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸாவும். சிறுவயதில் தனது தாய் தனக்கு விதவிதமான பேனாக்களை வாங்கிக் கொடுத்தபோது, தானும் இதுபோல் வித்தியாசமான ஒரு பேனாவை உருவாக்க வேண்டும் என கனவு கண்டுள்ளார் அவர். தற்போது அவரது கனவு நனவாகி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
நிச்சயம் ஸ்ரீனிவாஸா உருவாக்கிய பேனாவை பார்ப்பவர்கள் ஒருகணம் ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போவார்கள். ஏனெனில் அந்தளவுக்கு பிரம்மாண்டமாக பீரங்கி போன்று உள்ளது அந்த பேனா.
நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! ஒரே கம்பெனியில் 84 வருஷம் வேலை? கின்னஸ் சாதனை படைத்த 100 வயது வால்டர்
வித்தியாசமான ஆசை
ஹைதராபாத்தைச் சேர்ந்தவரான ஸ்ரீனிவாஸாவின் முழுப்பெயர் ஆச்சாரியா மகுருனி ஸ்ரீநிவாஸா ஆகும். வித்தியாசமான எதையாவது செய்து, அதில் சாதனைப் படைக்க வேண்டும் என ஆசைப் பட்டுள்ளார் ஸ்ரீனிவாஸா. அப்போது அவரது யோசனையில் உதித்ததுதான் இந்த பிரம்மாண்ட பேனா யோசனை.
சாதனை பேனா
அதன் தொடர்ச்சியாக தனது குழுவினருடன் சேர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு மிகப் பெரிய அளவிலான பால் பாயிண்ட் பேனா ஒன்றை அவர் உருவாக்கினார். கின்னஸ் சாதனைப் புத்தகத்திற்கும் தனது பேனா பற்றிய தகவல்களை அவர் அனுப்பினார். அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி அந்த பிரம்மாண்ட பேனாவை ஹைதராபாத்தில் கின்னஸ் நிர்வாகம் நேரில் ஆய்வு செய்தது.
கின்னஸ் சாதனை
தற்போது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பிரம்மாண்ட பேனா பற்றிய வீடியோவை கின்னஸ் வெளியிட்டுள்ளது. அதில் பெரிய பீரங்கியைத் தூக்கி வருவது போல, ஸ்ரீனிவாஸாவும், அவரது குழுவினரும் அந்தப் பேனாவைத் தூக்கி வருகின்றனர். பின்னர், அந்தப் பேனாவைக் கொண்டு எழுதியும், வரைந்தும் காட்டுகின்றனர்.
கலைநயமான பேனா
உலகிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படும் இந்த பேனா 5.5 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. சுமார் 37.23 கிலோ எடையில் இருக்கும் இந்தப் பேனாவின் வெளிப்பகுதி, பித்தளையால் ஆடல் கலையில் உள்ள 9 அம்சங்களையும், இசைக்கருவிகளின் தோற்றத்தையும் விளக்கும் வகையில் கலைநயத்துடன் செய்யப்பட்டுள்ளது.
எழுதும் வசதி
எழுதும்போது மை வெளியே வருவதற்கு ஏதுவாக சிறிய உலோக உருண்டையும் அதன் நுனியில் பொருத்தப்பட்டு உள்ளது. அதோடு, பேனாவிற்கு மூடியும், சட்டையில் மாட்டுவதற்கு வசதியாக மற்ற பேனாக்களில் இருப்பது போன்ற கம்பி அமைப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேனாவின் வீடியோவை நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.
குவியும் லைக்ஸ்
இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பார்ப்பதற்கே பிரமிப்பாக உள்ள இந்த பேனாவைப் பற்றி, நெட்டிசன்களும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே சாதனை புரிந்த ஸ்ரீனிவாஸாவிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
புதிய சாதனை
இதற்கு முன்னர் 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த பேனாதான் உலகின் மிகப் பெரிய பேனா என்ற சாதனையைப் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை ஸ்ரீனிவாஸா உருவாக்கிய பேனா முறியடித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீனிவாஸாவின் இந்தப் புதிய பேனா பற்றிய வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.