பெங்களூர் வங்கிப் பணம் ரூ. 1.37 கோடி கொள்ளை.. 7 நாட்களுக்குப் பின் சிக்கிய வேன் டிரைவர்
ஏடிஎம்மில் நிரப்பச் சென்ற வங்கிப் பணம் ரூ.1.37 கோடியை கொள்ளையடித்துச் சென்ற டிரைவரை 7 நாட்களுக்குப் பின்னர் பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர் வங்கிகளில் பணத்தை மாற்றவும், ஏடிஎம்களில் உள்ள பணத்தை எடுக்கவும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தை கடத்திக் கொண்டு போய் ஒரு வாரம் ஜாலியாக செலவு செய்த டிரைவர் இன்று கே.ஆர். புரத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று அதனை எடிஎம்களில் நிரப்பும் பணியை செய்துவருகிறது. அந்த நிறுவனத்தில் டிரைவராக டொமினிக் ராய் என்பவரும், உதவி மேலாளராக சிவக்குமார் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 23ம்தேதி பல்வேறு வங்கிகளில் பணத்தை பெற்று ஏடிஎம்மில் நிரப்ப வேனில் 2 காவலாளிகளுடன் சிவக்குமார் புறப்பட்டு சென்றார். அந்த வேனை டொமினிக் ராய் ஓட்டிச்சென்றனர்.

மெஜஸ்டிக் அருகே கே.ஆர். சாலையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு வேன் சென்றதும் சிவக்குமார் வங்கிக்குள்ளும், காவலாளிகள் இயற்கை உபாதை கழிக்கவும் சென்றனர். அந்த சந்தர்ப்பத்தில் ரூ.1.37 கோடி இருந்த வேனை டிரைவர் டொமினிக் ராய் கடத்திச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் டொமினிக் ராயை பிடிக்க 4 தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. கடந்த 24ம் தேதி அதிகாலை கடத்தப்பட்ட வேன் வசந்த்நகர் அருகே நின்றது. வேனையும் அதில் இருந்த ரூ.45 லட்சம், ஒரு துப்பாக்கி ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.
மீதிப் பணம் ரூ.92 லட்சத்துடன் டொமினிக் ராய் தலைமறைவாகி இருந்தார். அவர், தனது மனைவி ஈவ்லினையும், 10 வயது மகனையும் தன்னுடன் அழைத்துச்சென்றுவிட்டார். டொமினிக் ராயின் சொந்த ஊர் தமிழ்நாடு என்பதால், அவர் தமிழ்நாட்டுக்கு சென்று பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள். அவர் கேரளாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாகவும் கூறப்பட்டதால் தனிப்படை போலீசார் தமிழ்நாடு, கேரளாவில் முகாமிட்டு தலைமறைவான டொமினிக் ராய், அவரது மனைவி எவ்லினை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஞாயிறன்று இரவு பானசவாடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட லிங்கராஜபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு எவ்லின் வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் ஈவ்லினை கைது செய்து விசாரித்தனர். அவரிடம் இருந்த பணப்பையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் ரூ.79 லட்சத்து 8 ஆயிரம் இருந்தது. அவை அனைத்தும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.
ஈவ்லினுடன் அவரது மகனும் இருந்ததால் அவனை உறவினர்களிடம் ஒப்படைத்துவிடும்படி போலீசார் கூறியதற்கு அவர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. உப்பார்பேட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஈவ்லினிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது கணவர் மறைந்திருக்கும் இடத்தை கூறியதை அடுத்து டிரைவரை இன்று காலையில் போலீசார் கே.ஆர் புரத்தில் கைது செய்தனர். மீதி பணம் குறித்தும் பணத்தை கடத்தியது ஏன் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications