எங்கப்பா இறந்துட்டார், அவரை மாதிரி நானும் ராணுவத்தில் சேருவேன்.. 10 வயது சிறுவன் உருக்கமான பேச்சு
டெல்லி: எங்கப்பா இறந்துட்டார். அவர் ராணுவத்தில் இருந்தார். அவரை மாதிரி நானும் ராணுவத்தி் சேருவேன் என்று கூறியுள்ளான் 10 வயது சிறுவன்.
அந்த சிறுவனின் பெயர் ஹேமந்த். இவனது தந்தையின் பெயர் ராஜ்கிஷோர் சிங். ராணுவத்தில் நாயக்காக இருந்தவர். யூரி தாக்குதலில் உயிரிழந்த 19வது வீரராக வீர மரணமடைந்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் ராஜ்கிஷோர் சிங். யூரி தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார் சிங். இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் அதிரடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அதிரடித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக முடிந்த சில மணி நேரங்களில் சிங்கின் உயிர் பிரிந்தது.
35 வயதான ராஜ்கிஷோர் சிங் டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். யூரி தாக்குதலில் காயமடைந்தவர் இவர். பீகார் மாநிலம் அர்ரா பகுதியைச் சேர்ந்தவர். இவரது குடும்பத்தில் 3 சகோதரர்கள் ராணுவத்தில் உள்ளனர். அதில் கடைக்குட்டி சிங்.
சிங்குக்கு ஹேமந்த் தவிர 12 வயதில் சுஹானி என்ற மகள் உள்ளார். ஹேமந்த் தனது தந்தையின் வீர மரணத்தால் நிலை குலைந்து போய் விடவில்லை. மாறாக, நானும் ராணுவத்தில் சேருவேன். நாட்டுக்காக போராடுவேன் என்று தைரியமாகவும், உறுதியாகவும் கூறியுள்ளான். அவனது பேச்சைக் கேட்டு சிங்கின் குடும்பத்தினரும், நண்பர்களும், ராணுவத்தினரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜ்கிஷோர் சிங்கின் தந்தையும் கூட ராணுவத்தில் இருந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.