கருக்கலைப்பு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்த 10 வயது சிறுமிக்கு பிறந்தது பெண் குழந்தை
கருக்கலைப்பு செய்வதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
சண்டிகர்: பாலியல் பலாத்காரத்தால் கர்ப்பம் தரித்த 10 வயது சிறுமியின் கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. அந்தச் சிறுமிக்கு இன்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளது.
சண்டீகரில் 10 வயது சிறுமி அவரது உறவினர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அச்சிறுமி கருவுற்றார். இந்நிலையில் சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை சண்டீகர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் சண்டீகரில் உள்ள பிஜிஐஎம்இஆர் மருத்துவமனையிடம் அறிக்கை கேட்டது. மருத்துவமனை அளித்த அறிக்கையின் படி, மருத்துவ அறிக்கையில் கருவைக் கலைப்பதால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து நேரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கருவைக் கலைக்க அனுமதி மறுத்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், கருவைக் கலைக்காமல் இருந்த சிறுமிக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதனையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று காலை 2.2 கிகி எடை கொண்ட பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தைக்கும் சிறுமிக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவர் தசாரி ஹரிஷ் கூறியுள்ளார்.
சிறுமியின் வயிற்றில் கட்டி இருப்பதாகக் கூறியே சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தனக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பது தெரியாமல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் அவரது பெற்றோர்கள் இருந்து கவனித்து வருகின்றனர்.