தர்காவுக்கு சென்ற வேன் மீது பஸ் மோதி 15 பேர் சாவு
பெங்களூர்: அரசு பஸ்சும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், குல்பர்கா மாவட்டம் ஆலந்த் என்ற பகுதியில் இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த விபத்து சம்பவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் அக்கல்கூடு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த சிலர் குல்பர்கா நகரின் அருகேயுள்ள தர்காவுக்கு தொழுகை நடத்த வேனில் வந்து கொண்டிருந்தனர். ஆலந்த் பகுதியில் வேன் வேகமாக வந்துகொண்டிருந்தபோது, கர்நாடக அரசு பேருந்தும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன.
மோதிய வேகத்தில் வேன் சாலையோர பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் பெரும்பாலானோர் வேனில் பயணித்தவர்கள்தான். 12 பேர் படுகாயமடைந்தனர். இதில் பஸ் டிரைவர் உட்பட அதில் பயணித்த 6 பேரும் அடங்கும். காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications