18 வருடங்களுக்கு முன்பு மாயமான ராணுவ வீரரின் உடல் சியாச்சின் சிகரத்தில் கண்டுபிடிப்பு
டெல்லி: 18 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரரின் உடல், இத்தனை காலத்திற்குப் பிறகு தற்போது சியாச்சின் பனிச் சிகரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
18 வருடங்களுக்கு முன்பு அதாவது 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் சியாச்சின் -சல்டோரோ ரிட்ஜ் பகுதியில் காணாமல் போனார் ராணுவ வீரர் ஹவில்தார் கயா பிரசாத். அவர் கந்தா டிராப் என்ற இடத்தில் பெரிய பள்ளத்தில் விழுந்துள்ளார். உடனடியாக தேடுதல் வேட்டைகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால் கயா பிரசாத்தை மீட்க முடியவில்லை. உடலும் கிடைக்கவில்லை.
இதனால், கயா பிரசாத் என்ன நேர்ந்தது எனத் தெரியாமல் அவரது குடும்பத்தினர் கடந்த 18 வருடமாக தவித்து வந்தனர்.
இந்நிலையில் தற்போது அவரது உடல் சிக்கியுள்ளது. பனிப் பிரதேசம் என்பதால் உடல் கெட்டுப் போகாமல் அப்படியே கிடைத்துள்ளது. இப்போது அவரது மறைவுச் செய்தியை அறிந்து அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
ராணுவ மரியாதையுடன்...
மீட்கப்பட் கயா பிரசாத்தின் உடலை அவரது சொந்த ஊரான உ.பி. மாநிலம் மைன்பூரி மாவட்டம், குரைரா கிராமத்திற்கு ராணுவத்தினர் எடுத்துச் செல்கின்றனர். அங்கு அவருக்கு முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
குடும்பம்...
கயா பிரசாத்துக்கு தந்தை கஜந்தர் சிங், மனைவி ரமா தேவி, மகன் சதீஷ், மகள்கள் மீனா, மஞ்சு ஆகியோர் உள்ளனர்.
வருத்தம்...
கயா பிரசாத்தின் தந்தை கூறுகையில், எனது மகன் பணியின்போது இறந்து விட்டதாக ராணுவம் தெரிவித்தது. ஆனால் உடல் கிடைக்கவில்லை. ஆனால் இத்தனை காலத்திற்குப் பிறகு இந்த வயதில் எனது மகனின் உடலைப் பார்க்க முடிந்துள்ளது. இதுதான் வருத்தமாக இருக்கிறது என்றார்.
இறுதிச்சடங்கு...
கயா பிரசாத் காணாமல் போனபோது அவரது மகன் சதீஷுக்கு வயது 12தான். தற்போது 30 வயதாகும் அவர் தனது தந்தையின் உடலைப் பெற சண்டிகர் வந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘எனது தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் போய் விடுமோ என்ற கவலையில் நான் இருந்தேன். ஆனால், எங்களது குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருந்தனர். இப்போது அவரது உடல் கிடைத்து விட்டது' எனத் தெரிவித்துள்ளார்.