காஷ்மீர் போலி என்கவுண்ட்டர்-7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று கூறி திட்டமிட்டு சுட்டுக் கொலை செய்த 7 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லையில் மாசில் செக்டாரில் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் நாள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவம் தெரிவித்தது.
ஆனால் உயிரிழந்த 3 பேரும் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் நாதிகால் பகுதியை சேர்ந்த ஷாஜத் அகமது கான், ரியாஸ் அகமது லோன் மற்றும் முஹம்மது ஷாபி லோன் என்று அடையாளம் காணப்பட்டது.
இந்த மூன்று பேரையும் வேலை தருவதாககூறி ராணுவம் எல்லைக்கு அழைத்து சென்றது. ஆனால் அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தீவிரவாதிகள் என்று கூறியுள்ளது என அவர்களது பெற்றோர்கள் குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் ராணுவத்தினர் நடத்தியது போலி என்கவுண்ட்டர் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த போலி என்கவுண்ட்டரை நடத்திய ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 7 ராணுவத்தினருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.