பஞ்சாபில் காங்கிரஸ் பிரச்சார கூட்டம் அருகே குண்டுவெடிப்பு: 3 பேர் பலி; 15 பேர் படுகாயம்
பஞ்சாப் மாநிலத்தில் சக்தி வாய்ந்த கார் குண்டுவெடித்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதின்டா: பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பிரச்சார கூட்டம் நடைபெற்ற இடம் அருகில் கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். 15 படுகாயம் அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 4 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டமன்ற தேர்தலையொட்டி தீவிரமாக பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள மாருர் மண்டிர் என்ற பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பிரச்சார கூட்டம் நேற்று மாலை நடந்துகொண்டிருந்தது.
அப்போது அந்த பகுதி அருகே மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் ஒரு சிறுவன் உள்பட இரண்டு பெரியவர்கள் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்து விரைந்து வந்து குண்டுவெடிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
காரில் குக்கர் வெடிகுண்டை பயன்படுத்தி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் குண்டின் தன்மை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் பிரச்சார பகுதிக்கு அருகில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.