மோடி அமைச்சர்களில் 30% பேர் மீது கிரிமினல் வழக்குகள்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 30% பேர் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் இவர்களில் 18% பேர் மீது மிகவும் ஆபத்தான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மோடி அமைச்சர்கள், வேட்புமனுத் தாக்கல் செய்த போது தேர்தல் ஆணையங்களிடம் தெரிவித்த தகவல்களை தேசிய தேர்தல் கண்காணிப்பகம் மற்றும் ஜனநாயகத்துக்கான மறுசீரமைப்பு கூட்டமைப்பு ஆகியவை ஆராய்ந்தது.
பிரதமர் மோடி உட்பட அமைச்சரவையில் உள்ள 46 பேரில் 44 பேர் தேர்தலில் போட்டியிட்டவர்கள். அமைச்சர்கள் பிரகாஷ் ஜவ்தேகர் மற்றும் நிர்மலா சீதாராமன் தேர்தலில் போட்டியிடாதவர்கள். 44 பேர் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் இந்த இரு அமைப்புகளும் வெளியிட்ட தகவல்களின் தொகுப்பு:
91% கோடீஸ்வரர்கள்..
மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளோரில் 91% கோடீஸ்வரரகள்.
அமைச்சர்களின் சராசரி சொத்து
மோடி அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ13.47 கோடி. 5 அமைச்சர்களின் சொத்து மதிப்பு ரூ30 கோடிக்கும் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டாப் லிஸ்டில் அருண் ஜேட்லி
நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் அருண் ஜேட்லிதான் தமக்கு ரூ113 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரை அடுத்து அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ108 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
30% பேர் மீது கிரிமினல் வழக்குகள்
மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 44 பேரில் 13 பேர் அதாவது 30% தங்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளனர்.
18% சீரியஸ் கிரிமினல் வழக்குகள்
இவர்களில் 18% பேர் அதாவது 8 பேர் மீது சீரியஸான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை முயற்சி, மததுவேஷம், கடத்தல் மற்றும் தேர்தல் வன்முறைகள் என்பவைதான் சீரியஸ் கிரிமினல் வழக்குகள்.
உமாபாரதி மீது கொலை முயற்சி வழக்கு
நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உமாபாரதி மீது கொலை முயற்சி வழக்கு, மத துவேஷ பேச்சு, தேர்தலில் சட்டவிரோதமாக பணம் கொடுத்தது போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ராம்விலாஸ் பாஸ்வான், உபேந்திரா குஸ்வாஹா
ராஷ்டிரிய லோக் சமதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் உபேந்திரா மற்றும் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் மீது லஞ்ச வழக்கு நிலுவையில் இருக்கிறது.
ஆட்கடத்தல் வழக்கில் முண்டே
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மீது ஆட்கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது.