சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக... 16வது லோக்சபாவை அலங்கரிக்கப் போகும் 61 பெண் எம்.பிக்கள்!
டெல்லி: சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக 16-வது நாடாளுமன்றத்தில் அதிக பெண் எம்.பி.க்கள், அதாவது 61 பேர் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543. இதுவரை அமைந்த 15 நாடாளுமன்றத்திலும் மிகக் குறைந்த அளவிலேயே பெண்கள் தேர்வு செய்யப் பட்டிருந்தனர். ஆனால், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு கோரி பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் முதன்முறையாக 61 பெண் எம்பிக்கள் அமைய உள்ள 16வது நாடாளுமன்றத்திற்கு தேர்வாகியுள்ளனர். இது 11.3 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாடாளுமன்றத் தேர்தல்...
கடந்த 1952ம் ஆண்டு அதாவது சுதந்திரத்துக்குப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் 5 சதவீத பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
அதிகமும், குறைவும்...
கடந்த 1977ம் ஆண்டு மிகக் குறைந்த அளவாக வெறும் 4 சதவீத பெண்களும், அதிகபட்சமாக கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 10.7 சதவீத பெண்களும் (58 பேர்) எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
சாதனை...
2009ம் ஆண்டு சாதனையை முறியடிக்கும் விதமாக நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் சுமார் 61 பெண்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இதுவே அதிகபட்சம் ஆகும். அதாவது 11.3 சதவீதம் பெண் உறுப்பினர்கள்.
சோனியா, சுஷ்மா....
16-வது நாடாளுமன்றத்தில், சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், ஹேமமாலினி உள்ளிட்ட முக்கிய பெண் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.