சத்தீஸ்கரில் குழந்தையை நரபலி கொடுத்த 7 பேருக்கு தூக்கு தண்டனை!
ராஞ்சி: சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 வயது குழந்தையை நரபலி கொடுத்த 7 பேருக்கு செசன்ஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிலாய் நகரில் வசிக்கும் ஈஸ்வரி யாதவ் - கிரண் தம்பதியர் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து பக்கத்து வீட்டு குழந்தை சிராக்கை நரபலி கொடுத்ததாக கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் 12 பேர் மீது போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர் இவர்களில் நால்வர் மைனர் சிறுவர்கள்.
இந்த வழக்கில் ஈஸ்வரி யாதவ், கிரண், மகனாந்த், ராஜேந்திரா, அஜய் மற்றும் ஹேமந்த் ஆகியோர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் கடந்த வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
நரபலி செயலை மிகக் கொடுங்குற்றம் என்று வர்ணித்த நீதிபதி எ.எஸ்.ஜெ. கவுதம் சவுதார்யா, 7 பேரும் சிறுவனை கடத்தி, கொலை செய்துள்ளனர். இதனால் இந்த 7 பேருக்குமே தூக்கு தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார். மைனர் சிறுவர்கள் மீதான வழக்கு சிறுவர்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வழக்கின் பின்னணி?
ஈஸ்வரி யாதவ், கிரண் தம்பதியர் தங்களின் குழந்தைகள் பிரியா, பிரித்தீ ஆகியோர் மந்திர சக்தி பெற்று அதிக பணம் சம்பாதிக்க வேண்டி ஒரு குழந்தையை நரபலி கொடுக்க திட்டமிட்டனர்.
இந்நிலையில் போசன், துர்கா தம்பதியரின் 2 வயது குழந்தை சிராக்., கடந்த 2010 ஆண்டு நவம்பர் மாதம் மாயமானான். அந்த குழந்தையை கடத்திய அஜய் யாதவ், ஈஸ்வர் யாதவிடம் விற்பனை செய்துள்ளான். இதையடுத்து சிராக்கின் கழுத்தை அறுத்து நரபலி கொடுத்துள்ளனர்.
மாயமான குழந்தையை உறவினர்களுடன் தேடிய போது ஈஸ்வரி யாதவ் வீட்டில் பாத்திரத்தில் ரத்தம் இருந்ததை கண்டுபிடித்தனர். சிறுவனை நரபலி கொடுத்த யாதவ் தம்பதியர், தலையை குழி தோண்டி புதைத்துள்ளனர். இதுபற்றி போலீசில் புகார் கொடுத்த போது உண்மையை ஒப்புக் கொண்டனர். இதன் பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.