ராஜஸ்தானில் ஷாக்! திருமண விழாவில் பங்கேற்ற ஓமிக்ரான் நோயாளிகள்.. பலருக்கும் வைரஸ் பரவ வாய்ப்பு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட 9 பேருக்கும் நகரில் 100 பேர் கலந்துகொண்ட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இதனால் கொரோனா பெருந்தொற்று முடியும் நிலைக்கு வந்துவிட்டதாக உலக ஆய்வாளர்கள் கருதினர்.
இந்தச் சூழலில் தான் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ.25ஆம் தேதி புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது அடுத்த அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றம்: புயலை கிளப்பும் நாகாலாந்து பொதுமக்கள் படுகொலை- விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
ஓமிக்ரான் வைரஸ்
இந்த ஓமிக்ரான் வைரஸ் பரவுவதைத் தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல நாடுகளும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் உடனான விமான போக்குவரத்துக்கு முற்றிலுமாக தடை விதித்துவிட்டன. இருப்பினும், இந்தத் தடை உத்தரவு பெரியளவு பலன் அளித்ததாகத் தெரியவில்லை. ஏற்கனவே, 30க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
இந்தியாவில் ஓமிக்ரான்
இந்தியாவிலும் கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பிறகு, குஜராத், டெல்லி மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் நேற்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 9 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
திருமண விழா
இந்நிலையில், ஜெய்ப்பூரில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட 9 பேரில் 4 பேர் 100 பேர் கலந்துகொண்ட திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓமிக்ரான் வைரஸ் மேலும் பலருக்கும் பரவும் சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ராஜஸ்தான் சுகாதாரத் துறை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. திருமணத்தில் கலந்து கொண்டவர்களின் மாதிரிகளைச் சேகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தான் நடவடிக்கை
இது தொடர்பாக அம்மாநில மருத்துவத் துறை செயலாளர் வைபவ் கல்ரியா கூறுகையில், "அந்த 4 பேரும் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தனர். கடந்த. நவ.29இல் அவர்கள் ஜெய்ப்பூரில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்டனர். அந்த திருமண விழாவில் கலந்து கொண்டவர்களில் ஒருவருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அந்த திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த தரவுகளைச் சேகரித்து வருகிறோம்" என்றார்.
பணிகள் தீவிரம்
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த அந்த திருமண நிகழ்வில் குறைந்தபட்சம் 100 பேர் கலந்து கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 34 பேரின் மாதிரிகளைச் சுகாதாரத் துறை சேகரித்துள்ளது. இதில் மணமகள் டெல்லியைச் சேர்ந்தவர் என்பதால் டெல்லியைச் சேர்ந்தவர்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் டெல்லி சுகாதாரத் துறைக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ராஜஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.