பெங்களூரில் பரபரப்பு.. லோக்ஆயுக்தா அலுவலகத்திற்குள்ளே புகுந்து நீதிபதிக்கு கத்தி குத்து!
பெங்களூர்: கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி அவரது அலுவலகத்திற்குள்ளேயே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரில், கர்நாடக தலைமைச் செயலகமான விதான சவுதா அருகே அமைந்துள்ளது லோக்ஆயுக்தா அலுவலகம். இன்று மதியம் 2 மணியளவில் லோக்ஆயுக்தா நீதிபதி விஸ்வநாத் ஷெட்டி வழக்கு ஒன்று தொடர்பாக விசாரித்துக்கொண்டிருந்தபோது, தேஜராஜ் ஷர்மா என்ற நபர் திடீரென உள்ளே நுழைந்து மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென விஸ்வநாத் ஷெட்டியை குத்த ஆரம்பித்துவிட்டார்.

இதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்பு அதிகாரிகள், கத்தியால் குத்திய நபரை பிடித்து மேலும் குத்தவிடாமல் தடுத்தனர். மேலும், காயமடைந்த விஸ்வநாத் ஷெட்டி, அருகேயுள்ள மல்லையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவருக்கு வயிறு, நெஞ்சு பகுதி மற்றும் இடது கை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. நீதிபதியே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக மல்லையா மருத்துவமனைக்கு முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் விரைந்தனர். போலீஸ் டிஜிபி, பெங்களூர் நகர கமிஷனர் உள்ளிட்டோரும் விரைந்தனர். நீதிபதிக்கு உரிய சிகிச்சையளிக்க மருத்துவமனை நிர்வாகிகளுக்கு சித்தராமையா உத்தரவிட்டார்.
இதுகுறித்து சித்தராமையா கூறுகையில், கொலைமுயற்சியில் ஈடுபட்ட நபரின் பின்னணி குறித்து விசாரிக்க டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். விஸ்வநாத் ஷெட்டி உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர், என்று சித்தராமையா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications