நடிகை மைத்ரியா எனது மனைவி.. இயக்குநர் புதிய புகார்: கார்த்திக் கவுடா வழக்கில் திடீர் திருப்பம்
பெங்களூர்: நடிகை மைத்ரியா எனது மனைவி. அவர் என்னை ஏமாற்றிவிட்டார். என்று சினிமா இயக்குனர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதன்மூலம் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா வழக்கில் புதிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா. இவருக்கும், குடகு மாவட்டம் சோமவார் பேட்டையை சேர்ந்த நானய்யா என்பவரின் மகள் சுவாதிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அது நடந்து முடிந்த சில மணிநேரத்தில் கார்த்திக் கவுடா தன்னை காதலித்து, ஏற்கனவே ரகசிய திருமணம் செய்து இருப்பதாக கன்னட நடிகை மைத்ரியா, பரபரப்பு குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக கார்த்திக் கவுடா மீது ஆர்.டி.நகர் போலீசில் மைத்ரியா புகாரும் செய்தார். அதன்பேரில், கார்த்திக் கவுடாவுக்கு எதிராக பலாத்காரம், மோசடி உள்ளிட்ட வெவ்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னட இயக்குநர் புகார்
இந்த நிலையில், கன்னட திரைப்பட இயக்குனர் ரிஷி என்பவர் பெங்களூர் நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் மூலமாக ஒரு புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
இயக்குநரின் மனைவியா?
அதில் "நடிகை மைத்ரியா என் மனைவி. எனக்கும் நடிகை மைத்ரியாவிற்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. நடிகை மைத்ரியா என்னை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றி விட்டார். இப்போது வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய சர்ச்சை
இது தொடர்பாக இயக்குனர் ரிஷியின் பேட்டியும், அவர் அளித்த ஆதாரமும் நேற்று தனியார் தொலைக்காட்சியில் வெளியானது. இது கர்நாடகாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு சர்ச்சையையும் கிளப்பியது.
நான் அப்போ மைனர்
இந்த புகார் தொடர்பாக நடிகை மைத்ரியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "இயக்குனர் ரிஷி என்னை திருமணம் செய்து கொண்டதாக கூறிய 2004-ம் வருடம் எனக்கு 16 வயது என்றார்.
மானநஷ்ட வழக்கு
கார்த்திக் கவுடா எனக்கு பணம் கொடுத்து சரிகட்ட நினைத்தார். ஆனால் என் முடிவில் நான் உறுதியாக இருந்ததால் வேறு வகையில் என்னை மிரட்ட நினைக்கிறார். மேலும் ரிஷி என்பவர் மூலம் என்னை அசிங்கப்படுத்த நினைக்கிறார். இதுகுறித்து இயக்குனர் ரிஷி மீது மான நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன்'' என்றார்.