இது தான் இப்போது ஆம் ஆத்மி கட்சியின் நிலைமை!!
டெல்லி: ஆரவாரமாக ஆரம்பிக்கப்பட்ட அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் தோல்வி நிலவரம் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்த அரசியல் பார்வையாளர்கள் புள்ளிவிவரத்தோடு ஆதாரங்களை அடுக்குகிறார்கள்.
போட்டியிட்டதே சாதனை
ஆம் ஆத்மி கட்சி நாடுமுழுவதிலும் 432 தொகுதிகளில் போட்டியிட்டது. குறைநத் தேர்தல் அனுபவம், தேர்தல் நிதி பற்றாக்குறை ஆகியவற்றுக்கு நடுவே இவ்வளவு தொகுதிகளில் அவர்கள் போட்டியிட்டதே பெரிய சாதனைதான். நாட்டிலேயே அதிக தொகுதிகளில் போட்டியிட்டது பகுஜன் சமாஜ்கட்சிதான். அது மொத்தம் 503 இடங்களில் போட்டியிட்டது. அதற்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி உள்ளது. இப்போதைய, ஆளும் கட்சியான பாஜக கூட, 428 தொகுதிகளில்தான் போட்டியிட்டது. பிற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியிருந்தது.
டெல்லிக்கு அங்க நாங்கதான்
டெல்லி மற்றும் பஞ்சாப் மண்டலத்தில் 12 தொகுதிகளில் ஆம் ஆத்மி வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் முதலிடம் அல்லது இரண்டாம் இடங்களை பிடித்து அசத்தியுள்ளது. இதை தவிர்த்து நாட்டின் வேறு எந்த பகுதியிலும் ஆம் ஆத்மி முதல் இரு இடங்களுக்குள் வரமுடியவில்லை. இதில் வாரணாசி மட்டும் விதிவிலக்கு. மொத்தம் 47 தொகுதிகளில் ஆம் ஆத்மி 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த 47பேரில் 4பேர்தான் 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளனர்.
டெபாசிட் கிடைச்சதே புண்ணியம்
இந்தியா முழுவதிலும் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர்களில் கேஜ்ரிவால் உட்பட 19 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை திரும்ப பெற்றுள்ளனர். இது 'மைனஸ் 4.4' சதவீதமாகும்.
பிற கட்சிகள் மீது தாக்கம்
23 தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளைவிட குறைவாக உள்ளது. இதைத்தான் பிற கட்சிகளின் மீதான தாக்கமாக பார்க்க முடியும். அதில் நான்கு சீட்டுகள் கேரளா, சட்டீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய மாநிலங்களில் உள்ளன. அங்கெல்லாம் ஆம் ஆத்மி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. எனவே உள்ளூர் வேட்பாளரின் வெற்றியாகவே அதை பார்க்க வேண்டியுள்ளது.
முக்கிய தலைவர்கள்
ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் யாருமே சிறப்பான வெற்றியை பெறவில்லை. ஒரு மாதமாக வாரணாசியில் தங்கியிருந்து பிரச்சாரம் செய்த கேஜ்ரிவாரலுக்கும் டெப்பாசிட்டை காப்பாற்ற முட்டுமே முடிந்தது. பெரிய அளவில் வாக்கு வாங்க முடியவில்லை. டெல்லி மற்றும் டெல்லிக்கு வடக்கே மட்டுமே வாக்குகளை வாங்கி உள்ளனர். மத்திய இந்தியாவின் மூன்று பெரிய நகரங்களான நாக்பூர், இந்தூர், போபால் ஆகியவற்றில் செல்வாக்கு மிக்க வேட்பாளர்களை நிறுத்தியும் ஆம் ஆத்மியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
வாக்கு சதவீதம்
ஆம் ஆத்மி மொத்தம் பெற்ற வாக்குகளில் 53 சதவீதத்தை டெல்லி, பஞ்சாப் மற்றும் சண்டீகர் பகுதிகளிலுள்ள 21 தொகுதிகளில் பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் அவர்கள் எஞ்சிய 47 சதவீதத்தைதான் பெற முடிந்தது. இதை பகுத்து பார்த்தால் ஒரு தொகுதிக்கு சராசரியாக 14 ஆயிரம் வாக்குகளைத்தான் அக்கட்சி பெற்றுள்ளது என்பதை காண்பிக்கிறது. அதிலும் கொல்கத்தா, ஒடிசாவை உள்ளடக்கிய கிழக்கு இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் அக்கட்சிக்கு வாக்கு சதவீதம் மிகவும் குறைவாக உள்ளது. இந்த புள்ளிவிவரத்தை வைத்து பார்க்கும்போது, ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே செல்வாக்கு பெற்றுள்ளதையும், பிற பகுதிகளில் அக்கட்சி மக்களிடம் புகழ் பெறவில்லை என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
சாதித்துள்ளார்கள்
1962ம் ஆண்டு சுதந்திரா கட்சி முதன்முறையாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 6.8 சதவீத வாக்குகளையும், 18 சீட்டுகளையும் வென்றது. காங்கிரசின் கோட்டையாக அந்த காலகட்டத்தில் விளங்கிய குஜராத், பிகார், ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை சுதந்திரா கட்சி பெற்றது. 1988ம் ஆண்டு உதயமான ஜனதாதளம் கட்சி மறு ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 143 தொகுதிகளை வென்றது. அக்கட்சிக்கு கூட்டணி பலமும் இருந்தது என்பதை கவனிக்க வேண்டும். ஆம் ஆத்மியை போலவே ஒய்எஸ்ஆர் காங்கிரசும் தனது முதலாவது நாடாளுமன்ற தேர்தலை இப்போதுதான் எதிர்கொண்டது. 42 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சிக்கு 2.2 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இது ஆம் ஆத்மியின் 2 சதவீத வாக்குகளை விட சற்று அதிகம்.