இரவில் சாப்பிடாமல் சிறையில் தேம்பித் தேம்பி அழுத ராஜேஷ், நுபுர் தல்வார்
காசியாபாத்: ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் என்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் நேற்று இரவு சிறையில் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தார்களாம்.
டெல்லி நொய்டாவைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஆருஷி தல்வார், அவரது வீட்டில் வேலை பார்த்த நேபாளத்தைச் சேர்ந்த ஹேம்ராஜ் ஆகியோர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கை விசாரித்து வந்த உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ராஜேஷ் மற்றும் நுபுர் குற்றவாளிகள் என்று நேற்று தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்னா சிறையில் தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் நேற்று இரவு உணவு சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்ததாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறையில் ராஜேஷுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. தனக்கு தலை சுற்றிக் கொண்டு வருவதாக தெரிவித்த நுபுரை மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.
ஆருஷி, ஹேம்ராஜ் கொலை வழக்கில் தல்வார்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.