எய்ட்ஸ் பாதித்த கணவரைக் கழுத்தை நெரித்துக் கொன்ற மனைவி... உபியில்!
பரேலி: எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவரை மனைவியே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் பரேலி மாவட்டத்தின் கமரியா கிராமத்தைச் சேர்ந்த 40 வயது டிரக் டிரைவர் ஒருவருக்கு, கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாமியார் வீட்டில் மனைவியோடு தங்கியிருந்த அந்த டிரைவர், நேற்று முன்தினம் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் குறித்து, உறவினர்களுக்கு மனைவி மற்றும் அவரது குடும்பத்தார் முறையான தகவல் தர மறுத்ததுடன், உள்ளூர் போலீசுக்கு தகவல் அனுப்பாமல் அவசர அவசரமாக இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆனால், தகவல் அறிந்து விரைந்த உயிரிழந்தவரின் உறவினர்கள், அவரது உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போஜிபுரா காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், டிரைவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, போஜிபுரா போலீசார் டிரக் டிரைவரின் மனைவி, மாமனார், மற்றும் இருவரை பிடித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் சமீபகாலமாக கொலை செய்யப்பட்ட டிரைவர் குடும்பத்திற்கு தெரியாமல் எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். தற்போது இந்த விவகாரம் தெரிய வந்ததைத் தொடர்ந்து, ஆத்திரத்தில் மனைவியே கணவரைக் கழுத்தை நெரித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது.