அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட் வாபஸ்.. இனி எல்லாம் சுபம்.. 24 மணி நேரத்திற்குள் பல்டியடித்த முலாயம் சிங்!
லக்னோ: அகிலேஷ் யாதவ் மற்றும் ராம்கோபால் யாதவ் ஆகிய முக்கிய தலைவர்களை சஸ்பெண்ட் செய்த உத்தரவை சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், இன்று திரும்ப பெற்றுக்கொண்டார். ஒன்றாக இணைந்து உத்தர பிரதேச தேர்தலை சந்திக்க அக்கட்சி ஆயத்தமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்லது.
உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வந்தது.
குறிப்பாக நேற்று கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை முலாயம் அறிவித்தார். அதில் அகிலேஷின் ஆதரவாளர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை.
இதற்கு போட்டியாக அகிலேஷ் 35 பேர் கொண்ட தனிபட்டியல் ஒன்றை வெளியிட்டார். இது பிரிவை அதிகமாக்கியது. இந்நிலையில்தான், 6 வருடங்களுக்கு கட்சியிலிருந்து, அகிலேஷ் யாதவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மற்றொரு மூத்த தலைவர் ராம்கோபால் யாதவுக்கும் இதே தண்டனை கிடைத்தது.
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் தனது வீட்டில் இன்று எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்தார். சமாஜ்வாதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அவர் வீட்டுக்கு சென்று ஆதரவு கொடுத்தனர். மேலும் உ.பி.யில் ஆங்காங்கு, முலாயம் மற்றும் அகிலேஷ் ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர்.
இப்பரபரப்பான சூழ்நிலையில், இன்று மதியம் 2 மணியளவில், திடீரென அகிலேஷ் யாதவ் மற்றும் ராம்கோபால் யாதவ் ஆகியோர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ் பெறப்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைமை அறிவித்துள்ளது. 24 மணி நேரத்திற்குள் இந்த அரசியல் 'ஹை-டிராமா' முடிவுக்கு வந்தது.