காங்கிரஸ் தலைவராகிறார் 'ரிட்டர்ன்' ராகுல்... கட்சி தலைவர்களுடன் மே 6-ல் சோனியா ஆலோசனை!!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிப்பது தொடர்பாக அக்கட்சி எம்.பி.க்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி மே 6-ந் தேதியன்று ஆலோசனை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குப் பின்னர் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நியமிக்கப்படுவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை. அதேசமயம் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் கடந்த 15-ந்தேதி டெல்லி திரும்பினார்.
அவர் மத்திய அரசின் விவசாய விரோத நடவடிக்கைகள், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிராக போராடி வருகிறார். மத்திய அரசானது விவசாயிகள் விரோதஅரசு என்ற முத்திரைகுத்தும் வகையில் நடவடிக்கைகளை மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தியதுடன், இந்தியா முழுவதும் விவசாயிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதயாத்திரையும் அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற 6-ந்தேதி மாலை விருந்துக்கு வரும்படி கட்சி எம்.பி.க்களுக்கும் மூத்த தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விருந்தின்போது ராகுலை கட்சித் தலைவராக்குவது தொடர்பாக எம்.பி.க்கள், மூத்த தலைவர்களுடன் சோனியா ஆலோசனை நடத்த இருக்கிறார். தற்போதைய நிலையில் காங்கிரசார் நம்பிக்கை கொள்ளும் வகையில் ராகுல் செயல்படுவதால் அவரை இந்த நிலையிலேயே அதிரடியாகக் கட்சித் தலைவராக்குவது என்பதுதான் சோனியாவின் திட்டமாம்.
இதனால் மே 6-ந் தேதி ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார்.