7 ஆண்டுகளில் 41 புலிகள் மரணம்: புலி பாதுகாப்பு தூதுவரான அமிதாப்பச்சன்
மும்பை: இந்தியாவில் கடந்த ஏழு மாதங்களில் 41 புலிகளை இழந்துள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. புலிகளை பாதுகாக்கும் வகையில் மகராஷ்டிராவில் புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் அழிந்து வரும் அரிய வகை வன விலங்குகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள புலிகளை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சர்வதேச அளவிலும் புலிகளை காப்பதற்காக ஜூலை 29ம் தேதியை உலக புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளை பாதுகாக்க
இது தொடர்பாக கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் அமிதாப் பச்சனை புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான சிறப்பு பிரசார தூதராக நியமிக்கலாம் என மாநில நிதி அமைச்சர் சுதிர் முன்கன்திவார் மற்றும் வனத்துறை அமைச்சர் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
அமிதாப் சம்மதம்
இதையடுத்து அமிதாப்புக்கு கடிதமும் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்திற்கு நேற்று பதில் அனுப்பிய அமிதாப், மகாராஷ்டிரா அரசின் புலிகள் பாதுகாப்புக்கான சிறப்பு தூதராக செயல்பட சம்மதம் என்று தெரிவித்தார். இதனையடுத்து அவர் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
41 புலிகள் மரணம்
தற்போது தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி வரையிலான 7 மாதங்களில் 41 புலிகள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
வேட்டையாடப்படும் புலிகள்
இதற்கு இயற்கை மரணத்துடன், வேட்டையாடப்படுதல், தொடர்ச்சியாக புலி - மனிதர்கள் எதிர்கொள்ள நேரிடுவதால், மனிதர்களின் பாதுகாப்புக்காக புலிகள் சுட்டுக் கொள்ளப்படுவதும் முக்கிய காரணங்கள் என தெரியவந்துள்ளது.
எந்தெந்த மாநிலங்கள்
கர்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் புலிகளின் மரணங்கள் எண்ணிக்கை அதிகபட்ச உள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
புலி தூதர் அமிதாப்
புலி பாதுகாப்பு திட்டங்களுக்கு தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஆனால் காடுகளின் பரப்பளவு அதிகரிக்காமல், புலிகளின் எண்ணிக்கையை மட்டும் அதிகரிக்க முயற்சிப்பது எதிர்மறையான விளைவுகளையே தரும் என்றும், மேலும் காடுகளை பாதுகாப்பதில் காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களை ஈடுபடுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகிறார்கள்.