நூடுல்ஸ் கேஸ்... போடட்டும்.. சட்டப்படி சந்திப்பேன்! - அமிதாப்
மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தி 2 ஆண்டுகளுக்கு மேலாகிறது. என் மீது வழக்குத் தொடர்ந்தால் அதை சட்டரீதியாகச் சந்திப்பேன், என்று அமிதாப் பச்சன் தெரிவித்தார்.
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் எம்.எஸ்.ஜி. என்ற மோனோசோடியம் குளுட்டோமேட் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதை அடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் மேகி நூடுல்சுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் மீதும் வழக்குப்பதிவு செய்யும் படி பீகார் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தேவைப்பட்டால் இவர்களைக் கைது செய்யலாம் என அனுமதியும் வழங்கியது. உடனடியாக முஸாபர்பூர் முதல் தகவல் அறிக்கை எனும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், விளம்பரத்தில் நடித்தது பற்றி தனது ட்விட்டரில் அமிதாப்பச்சன் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் தோன்றுவதை நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, இதுவரை எந்தவித நோட்டீசும் வரவில்லை.
அப்படி வரும் பட்சத்தில் அதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், உரிய ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக உள்ளேன்," என தெரிவித்துள்ளார்.