ஜெகன் அதிரடி! ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. பெரும் எதிர்ப்பை மீறி பறந்து வந்த உத்தரவு!
விஜயவாடா: ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று பெயர்மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. அம்மாவட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என பட்டியலின அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். அதன்படி ஆந்திரப் பிரதேச அரசு கடந்த மே 18ம் தேதி மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. 2 மாதங்கள் கழித்து இந்த மாவட்டத்துக்கு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என பெயர் சூட்ட அரசு பரிசீலனை செய்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக மக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

வன்முறை வெடித்தது
ஆனால் அண்ணல் அம்பேத்கர் பெயர்சூட்ட அப்பகுதியினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அமலாபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க சில அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். இதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் திடீரென இந்த கண்டன ஊர்வலம், போராட்டமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதனைக் கட்டுபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

144 தடை
தொடர்ந்து போராட்டம் வன்முறையாக மாறியது. குறிப்பாக ஆந்திர அமைச்சர் விஸ்வரூப் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ்குமார் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதனை கட்டுப்படுத்த முயன்றபோது 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். அதேபோல், ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டன. இதனால் அப்பகுதியில் 144 தடை அமல்படுத்தப்பட்டது. இதன்பின்னர் ஏராளமான கைது செய்யப்பட்டனர். குறிப்பாக வன்முறைக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெயர்மாற்றம்
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்காக அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து புதிய வருவாய் கோட்டங்கள் மற்றும் மண்டலங்களை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், அப்பகுதிகளில் பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரசு கருத்து
இதுகுறித்து ஆந்திர அரசின் ஆலோசகரான ராமகிருஷ்ண ரெட்டி கூறுகையில், மக்கள் தொகை மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த பின் மாவட்டத்தின் பெயரை மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவில் அரசு உறுதியாக இருக்கிறது. அதன்படி அதிகாரப்பூர்வமாக டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என மறுபெயரிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications