தமிழக ஜல்லிக்கட்டுபோல ஆந்திராவில் சேவல் சண்டைக்கும் 'பஞ்சாயத்து'... தடை மீறப்படுகிறது!
விசாகப்பட்டினம்: தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது போல ஆந்திராவின் சேவல் சண்டைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி சேவல் சண்டை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஆந்திராவில் பொங்கல் பண்டிகையொட்டி கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். ஆனால் சேவல்களின் கால்களில் கத்தியை கட்டுவதால் மிருகவதை எனக் கூறி இதற்கும் தடை வாங்கிவிட்டனர் மிருக நல ஆர்வலர்கள்.

தற்போது தடையை மீறி கோதாவரி மாவட்டங்களில் சேவல் சண்டைக்கான ஏற்பாடுகள் பல லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழகத்தைப் போலவே ஆந்திராவிலும் அனைத்து அரசியல் கட்சியினரும் சேவல் சண்டையை நடத்துவதற்காக மத்திய அரசு அனுமதியை கோரி வருகின்றனர்.
ஏற்கனவே சேவல் சண்டை நடந்தால் மாவட்ட காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதனால் சேவல் சண்டைகளைத் தடுக்கவும், நடத்துவோரை கைது செய்யவும் அம்மாநில காவல்துறை தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களைப் போல ஆந்திராவின் கோதாவரி மாவட்டங்களும் பதற்றத்தில் உள்ளன.












Click it and Unblock the Notifications