கொரோனா பாதித்த நுரையீரல்.. ரூ 2 கோடி திரட்ட முடியாத மக்களின் மருத்துவருக்காக கிராமத்தினர் செய்த உதவி
அமராவதி: கொரோனாவால் நுரையீரல் பாதித்த மக்களின் மருத்துவருக்கு உதவ ஒரு கிராமமே ரூ 20 லட்சத்தை திரட்டியது. அன்று மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்து உதவினார். இன்று மக்கள் அவருக்கு உதவுகிறார்கள், எத்தனை நெகிழ்ச்சியான சம்பவம் இது...
ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கரராவ் (38). இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பாக்கியலட்சுமியும் மருத்துவராவார். இவர் குண்டூர் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இருவரும் கரஞ்சேடு கிராம மக்களுக்கு இரவு பகல் பாராமல் மருத்துவ சேவையாற்றினர்.
கொரோனா தொற்று
இவர்களை மக்களின் மருத்துவர் என்றே அழைத்து வந்தனர். இவர்கள் இருவரும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் ஏப்ரல் 24ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேல் சிகிச்சை
பாக்கியலட்சுமி கொரோனாவிலிருந்து மீண்டார். ஆனால் பாஸ்கரராவ் நுரையீரல் பாதிப்பால் கடும் அவதியடைந்தார். முதலில் குண்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
நுரையீரல்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நுரையீரல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய எப்படியும் ரூ 2 கோடி வரை செலவாகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து மனைவி பாக்கியலட்சுமி தனது நண்பர்கள், உறவினர்கள் மூலமாக பணத்தை திரட்டும் பணியில் ஈடுபட்டார்.
ஹைதராபாத்
இதையடுத்து பாஸ்கரராவை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவும் சமூகவலைதளங்கள் மூலமாகவும் பணத்தை திரட்ட முடிவு செய்தார். இதனிடையே தங்களது கிராமத்தில் இரவு - பகல் பார்க்காமல் அயராது மருத்துவ சேவை புரிந்த பாஸ்கர ராவ் பணமில்லாத காரணத்தால் உயிருக்கு போராடி வரும் தகவல் கரஞ்சேடு கிராம மக்களுக்கு தெரியவந்தது.
மருத்துவ செலவு
இதுகுறித்து கிராம மக்கள் ஆலோசித்து மருத்துவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். தங்களால் இயன்ற பணத்தை பலர் கொடுத்ததை அடுத்து ரூ 20 லட்சம் வசூல் செய்யப்பட்டது. இதை பாக்கியலட்சுமியிடம் கொடுத்த மக்கள் மருத்துவருக்கு மருத்துவ செலவை கவனிக்குமாறு கூறினர்.
நுரையீரல்
இதனிடையே மருத்துவரின் உடல்நிலை குறித்தும் பணத்தை திரட்ட அவரது மனைவி அவதிப்படுவது குறித்தும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தகவல் சென்றது. இதையடுத்து மருத்துவர் பாஸ்கரராவின் சிகிச்சைக்கு ஆகும் செலவை மாநில அரசே ஏற்கும் என்றார். இந்த நிலையில் பாஸ்கரராவுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது.