குஜராத் மியூசியத்தில் துணிகரம் – 100 வருட பழமையான பொருட்கள் கொள்ளை!
வதோதரா: குஜராத் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்ட, பரோடா மியூசியத்திலிருந்து கொண்டு வந்து வைத்திருந்த 100 வருடங்கள் பழமையான விலை உயர்ந்த ரிவால்வர் துப்பாக்கிகளும், உடைவாள்கள் மற்றும் புகைப்பட தொகுப்புகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வதோதராவில் அமைந்துள்ள பிரபலமான குஜராத் மியூசியமானது 1894 ஆம் ஆண்டில் மன்னர் சாயாஜி ராய் கேக்வாட் மூலமாக உருவாக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் விலை மதிக்க இயலாத ஓவியங்கள், சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இங்குள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாண்டி, கொள்ளையர்கள் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவமானது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான கேள்விகளை அள்ளி வீசியுள்ளது.
மியூசியத்தின் அதிகாரியான விஜய் பாட்டில், காலையில்தான் இந்த சம்பவம் பற்றி கேள்விபட்டதாக தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள், மோப்ப நாய்களின் உதவியுடன் கொள்ளை தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.