ரூ.5 கோடி அபராதம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருக்கு பசுமை தீர்ப்பாயம் 1 மாதம் அவகாசம்
டெல்லி: உலக கலாச்சார விழா நடத்துவதற்காக எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் பசுமை தீர்ப்பாயம் விதித்த அபராத தொகையான 5 கோடி ரூபாயை செலுத்த ஒரு மாதம் அவகாசம் தேவை என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 25 லட்சம் ரூபாய் அபராதம் கட்டவும், மீதமுள்ள அபராத தொகையை 4 வாரங்களுக்குள் கட்டலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தலைமையிலான வாழும் கலை அமைப்பின் சார்பில், டெல்லியில் யமுனை நதிக்கரையில் இன்று முதல் 13ம் தேதிவரை, ‘உலக கலாசார திருவிழா' நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் இதில் பங்கேற்கின்றனர். இதற்காக ஆயிரம் ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விழாவுக்காக, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி, யமுனை நதியை காப்போம் என்ற இயக்கத்தினர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
செவ்வாய்கிழமையன்று இதனை விசாரித்த நீதிபதி சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, திருவிழாவுக்கு தடை விதிக்க மறுத்தது. அதே சமயத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, விழா தொடங்குவதற்கு முன்பு, ரூ.5 கோடி அபராதத்தை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், ஒருபைசா கூட அபராதம் செலுத்த மாடோம் என்றும் சிறை செல்ல தயார் என்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.
அபராதம் செலுத்த இன்றுவரை (11 ஆம்தேதி வரை) அவகாசம் உள்ளது.அதன்பிறகும் செலுத்தாவிட்டாலோ, எந்த நிபந்தனைகளாவது மீறப்பட்டாலோ இப்பிரச்சினையை மீண்டும் விசாரணைக்கு எடுப்போம். சட்டம் தனது கடமையை செய்யும். திருவிழாவுக்கான அனுமதியை வாபஸ் பெற வேண்டி வரும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தங்களது அமைப்பு ஒரு தொண்டு நிறுவனம் எனவும், ஒரே நாளில் 5 கோடி ரூபாயை புரட்டுவது இயலாத காரியம் எனவும் குறைந்த பட்சம் ஒருமாத கால அவகாசம் வேண்டும் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்தது.
அப்போது, ஊடகங்களில் வெளியான செய்தியை குறிப்பிட்ட நீதிபதி, ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர் போன்ற உயர்ந்த அந்தஸ்து உள்ளவரிடம் இருந்து இது போன்ற கருத்துக்களை எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
இதைத்தொடர்ந்து உங்களால் எவ்வளவு தொகையை இன்று கட்டமுடியும் என நீதிபதி வாழும் கலை அமைப்பிடம் கோரினார். தங்களால் ரூ 25 லட்சம் இன்று கட்ட முடியும் எனவும் மீத தொகையை 3 வாரங்களுக்குள் செலுத்துவதாகவும் வாழும் கலை அமைப்பு தெரிவித்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், 5 கோடி ரூபாய் அபராதம் கட்ட 4 வாரங்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.