மோடியைச் சந்தித்தார் கெஜ்ரிவால்.. பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்
டெல்லி: டெல்லி முதல்வராக பதவியேற்க இருக்கின்ற ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பதவியேற்பு விழாவிற்கு முறையாக அழைப்பு விடுத்தார்.
டெல்லி முதல்வராக பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று குடியரசுத்தலைவரை பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தனக்கு வாழ்த்து தெரிவித்ததற்காகவும், அறிவுரைக்காகவும் குடியரசுத் தலைவருக்கு கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, கெஜ்ரிவாலுக்கு தான் எழுதிய இரண்டு புத்தகங்களை பிரணாப் முகர்ஜி பரிசளித்தார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும், மணிஷ் சிசோடியாவுடன் சென்று கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அப்போது டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரினார். தலைநகரின் பாதுகாப்பு விஷயங்கள் குறித்தும் அவர் ராஜ்நாத் சிங்குடன் விவாதித்தார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறும் அழைத்தார்.
மேலும், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவை, அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ஏழை மக்களுக்கு மத்திய அரசின் உதவியுடன் இழப்பீடு வழங்குவது, அங்கீகாரமற்ற காலனிகளை முறைப்படுத்துவது, இது தொடர்பாக டெல்லி மாநகராட்சி, டெல்லி பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் உதவி பெறுதல் உள்ளிட்டவை குறித்து வெங்கையா நாயுடுவுடன் கெஜ்ரிவால் விவாதித்தார்.
அத்துடன், டெல்லிக்கு மேலும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வாகன நிறுத்துமிடங்கள் தேவைப்படுவதால் இதற்காக டெல்லி பெருநகர் வளர்ச்சிக்குழுமத்திடம் உள்ள நிலங்களை பெறுதல், டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்கச்செய்தல் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக மணிஷ் சிசோடியா தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை கெஜ்ரிவால் இன்று காலை 10.30 மணியளவில் ரேஸ்கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது 14 ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடக்கிற பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு மோடிக்கு அவர் முறையாக அழைப்பு விடுத்ததுடன் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்து மனு அளித்தார்.












Click it and Unblock the Notifications