பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி.. எதிர்கொள்ளப் போகும் 3 சவால்கள்!
டெல்லி: பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி முடிசூட்டப்பட்டுவிட்டார். மூத்த தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஆகியோரது எதிர்ப்புகளைத் தாண்டி மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலை பாரதிய ஜனதா கட்சி நரேந்திர மோடி தலைமையில் எதிர்கொள்ளப் போகிறது. இந்த அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சியினருக்கு அல்லது மோடியின் ஆதரவாளர்களுக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கலாம். ஆனால் நரேந்திர மோடி தற்போது 3 சவால்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
உட்கட்சி மோதல்
நரேந்திர மோடியை லோக்சபா தேர்தல் பிரசாரக் குழு தலைவராக நியமிக்கவே கடும் எதிர்ப்பு தெரிவித்து ராஜினமா நாடகமாடினார் அத்வானி. தற்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னரும் தூக்கிய போர்க்கொடியை இறக்கவே இல்லை அத்வானி. ஒருவழியாக சுஷ்மா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சமாதானமாகிவிட்டாலும் இது நீடித்த ஒன்றாக வைத்திருக்க வேண்டிய கட்டாயம் மோடிக்கு உண்டு.
அத்வானி, சுஷ்மா ஸ்வாராஜ், முரளி மனோகர் ஜோஷி மட்டுமின்றி மோடி பற்றிய அதிருப்தி கொண்டிருக்கும் பலரையும் சமாளித்து தமது அணியில் இணைத்து அரவணைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு மோடிக்கு முதலாவது சவாலாக இருக்கும். ஒருவேளை நாட்டின் பிரதமராக மோடி பதவியில் அமர்ந்தாலும் இந்த அதிருப்தி மனநிலை அவரது ஆட்சியிலும் எதிரொலிக்கவே செய்யும். ஆகையால் இதுவரை பாரதிய ஜனதாவை விட்டு வெளியேறிய, பாஜகவுக்குள் குமுறிக் கொண்டிருக்கிற அனைவரையும் குறிப்பாக எதியூரப்பா போன்றோரை மீண்டும் கொண்டுவந்து கட்சி ஒற்றுமையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு மோடிக்கு உண்டு.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் மீண்டும் மன்மோகன்சிங்கே பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று கூற முடியாது. காங்கிரஸ் துணைத் தலைவராக்கப்பட்டுவிட்ட ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராக்க காங்கிரஸ் முயற்சிக்கும். மன்மோகன்சிங்கே ராகுல் காந்தியின் கீழ் பணியாற்ற தயார் என்று சொல்லியும் இருக்கிறார். இந்த நிலையில் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் மோடிக்கு எதிராக கடுமையாக பேச முன்வருவர். அவர்களின் உரைகளில் பொதுவாக போலி என்கவுன்ட்டர் விவகாரமும் இருக்கும். இதுபோன்ற சிக்கல்களை மோடி எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
புதிய கூட்டணி
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 17 ஆண்டுகாலம் இருந்தது ஐக்கிய ஜனதா தளம். ஆனால் நரேந்திர மோடியை லோக்சபா தேர்தல் பிரசார குழு தலைவராக நியமித்ததற்கே கூட்டணியை விட்டு வெளியேறிவிட்டது. இப்போது சிவசேனாவும் சிரோன்மணி அகாலிதளமும் இப்போது கூட்டணிக் கட்சிகளாக இருக்கின்றன. பாரதிய ஜனதா தனிப் பெரும் கட்சியாக வென்றாலும் கூட ஆட்சி அமைக்க மேலும் சில கூட்டணிக் கட்சிகள் ஆதரவு அவசியம். ஆகையால் புதிய கூட்டணிக் கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பும் சவாலும் மோடிக்கு இருக்கிறது. முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மாற்றுக் கருத்து கொண்ட பல கட்சிகளையும் இணைத்துக் கொண்டு வலுவான கூட்டணியை அமைத்திருந்தார். அது போல தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுவானதாக்க வேண்டிய பெரும் பொறுப்பு மோடிக்கு இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.