இந்தியாவை விட்டு வங்கதேசத்தவர் வெளியேற அஸ்ஸாம் பாஜக கெடு!
குவஹாத்தி: வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்கள் 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்; இல்லையெனில் வெளியேற்றப்படுவர் என்று அஸ்ஸாம் பாரதிய ஜனதா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளைத் தேடி வடகிழக்கு மாநிலங்களில் குடியேறி உள்ளனர். இவர்களுக்கும் வடகிழக்கு பூர்வ குடி இனமக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் வெடிக்கின்றன.
இந்த நிலையில் லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தால் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் மூட்டை முடிச்சுகளுடன் வெளியேற்றப்படுவர் என்று நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு மேற்கு வங்க மாநிலம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் மத்திய அரசு, சட்டவிரோத வங்கதேசத்தவர் குடியேற்ற பிரச்சனையை தேசிய பிரச்சனை என்று நேற்று அறிவித்தது.
இதைத் தொடர்ந்து அஸ்ஸாம் மாநில பாஜகவினர், பகிரங்கமாகவே சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர் 15 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர்.
அப்படி நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் கட்டாயமாக வெளியேற்றப்படுவர் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதிய ஜனதா எம்.பி. காமாக்யா பிரசாத் கூறுகையில், அஸ்ஸாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை விரட்டும் பணியை பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் இன்னும் 15 நாட்களில் மேற்கொள்வர். இதன் முதற்கட்டமாக, 'அஸ்ஸாமை விட்டு வெளியேறுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குப் பின்னர் வீடுவீடாக சோதனை நடத்தி வெளியேற்றுவோம் என்றார்.